ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

Home Articles புறப்பொருள் வெண்பாமாலை வெளிப்படுத்தும் வாழ்வியல் நெறிகள்

முனைவர் க. லெனின் 06 Oct 2019 Read Full PDF

முனைவர் க. லெனின்,

உதவிப் பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம். ஜி. ஆர் கல்லூரி,

ஓசூர் - 635 130,

 

ஆய்வுச் சுருக்கம்

பண்டைய காலமக்கள் அகத்திலும் புறத்திலும் சிறந்து விளங்கினார்கள். அகம்மட்டுமே மனிதனை வாழவைத்துவிட முடியாது. மனிதன் புறம் சார்ந்த சமூகத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான். புறச்செய்திகளிலும் புறம்சார்ந்த நூல்களிலும் தான் அன்றைய தமிழின மக்கள் வாழ்ந்தவாழ்வியலை அறியமுடிகிறது. அம்மக்கள் பயன்படுத்திய பேசிய எழுதிய பார்த்த தன்னைமுழுமையாக இணைத்துக்கொண்ட எனஎதையும் அறிய ஏதுவாகிறது. தெய்வங்கள், வீரமறவனின்குடிப்பெருமை, பாராட்டுதலும்பரிசும், கூத்துக்கலைகள், பாதீடு, ஒற்று, பெண்மறுத்தல், போர்க்கருவிகள், உழவும்வாணிபமும், அறக்கோட்பாடு, ஆற்றுப்படுத்துதல், கணிவன், பேய்கள், பூக்கள், விலங்குகள், பயன்படுத்தப்பட்டபொருட்கள், இடங்கள், கையறுநிலைகள் போன்றவைகள் எடுத்தாளப்பட்டுள்ளன. இவ்வாய்வானது முழுவதும் ஐயனாரிதனார் இயற்றிய புறப்பொருள் வெண்பாமாலையில் இருந்து எடுக்கப்பட்டது ஆகும்.

போர் நடைபெற்ற அக்காலத்தில் மக்களின் நிலை என்ன? அம்மக்கள் வாழ்வதற்கான அணுகு முறைகளையும், நாட்டிற்காகச் சண்டையிட்டுக்கொள்ளும் வீரமறவர்களுக்குள்ளும்மனம் (அன்பு) இருக்கிறது என்பதையும், அவர்களும் முறையான வாழ்க்கையினை வாழக்கற்றுக் கொண்டவர்கள்தான் என்பதையும் முன்வைக்கமுயல்கிறது இவ்வாய்வு.

 

திறவுச்சொற்கள்:

1. புறப்பொருள் வெண்பாமாலை 2.புறம் 3.போர்கள் 4.அறப்போர் 5.மறவர்கள் 6.குடிப்பெருமை 7.கையறுநிலை 8.பேய்கள்

 

முன்னுரை

காடுகளில் மனிதன் நாடோடியாக வாழ்ந்து வந்தவன் ஒருகாலகட்டத்திற்குப் பிறகு நாகரிக வாழ்க்கையை அடைகின்றான். தன்னுடைய சமூகத்தை நாகரிகமாகவும் பண்பாட்டுடனும் நற்ஒழுக்கத்துடனும் நிலைநிறுத்த அவனுக்கு பலயுகங்கள் தேவைப்பட்டிருக்கும். அவ்வாறு பண்பட்ட சமூகம்தான் சங்ககால சமுதாயம். அன்றைய மக்கள் எண்ணம், செயல், வாழும் முறைகள் என தங்களை மேம்படுத்திக் கொண்டவர்கள். சங்ககாலம் பொற்காலம் என்றும் சங்கஇலக்கியங்கள் பொற்இலக்கியங்கள் என்றும்அழைக்கலாம். அப்படிப்பட்ட சங்க இலக்கியங்களில் அன்றைய மக்களின் வாழ்வியலை வெளிக்காட்டும் போது அகத்தையும் (காதலும்) புறத்தையும் (வீரமும்) முன்நிறுத்தியேவைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியப்பாடல்கள் பெரும்பாலும் அகப்பாடல்கள் மூலம் அககருத்துக்களே நிரம்பி வழிகின்றன. ஆங்காங்கே புறநூல்கள் கொஞ்சமாய் வெளிப்படுத்துவதாய் அமைகின்றன. தலைவன் தலைவியிடம் காதலைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் அவர்களின் வாழ்க்கை புறச்செய்திகளால் தான் சூழ்ந்துகிடக்கின்றன என்பதை புரிந்துகொள்ள முடியும். புறப்பொருளில் தான் அம்மனிதனின் வாழ்வியலை வெளிக்கொணர முடியும். அதனாலயே புறஇலக்கண நூலான புறப்பொருள் வெண்பாமாலை மூலம் பண்டைய மக்களின் வாழ்வியல் நெறிமுறைகளை வெளிக்கொணர்வதே இவ்வாய்வின் முக்கிய நோக்காகவும் பங்காகவும் இடம்பெறுகிறது.

 

தெய்வங்கள்

மனிதனின் மிகப்பெரிய நம்பிக்கையே தெய்வங்கள்தான். தெங்வங்கள் இல்லையென்றால் இந்நேரத்தின் மனிதர்கள் காட்டாறு போல தறிகெட்டுப் போயிருப்பார்கள். மனிதனின் எண்ணத்தில் கடவுள்பயம் இருந்திருக்கிறது. அதுதான் அவனை வாழ்க்கை என்ற ஒரு நேர்கோட்டில் செல்ல வைத்திருக்கிறது. தெய்வங்கள் மூலமாக வேதங்களுடைய பழக்கவழக்கங்களையும் அமைத்துக் கொண்டான். புறப்பொருள் வெண்பாமாலையில், கொற்றவை, முருகன், சிவபெருமான், திருமால்ஆகியகடவுள்களைப்பற்றிசொல்லப்பட்டுள்ளன.

           “‘‘ஒளியின் நீங்கா விறல் படையோள்

           “அளியின் நீங்கா அருள் உரைத்தன்று’’ (பு.வெ.மாலை.கொளு.1:18)

அன்னை வழிப்பட்ட தமிழ்ச்சமுதாயத்திற்கு முதற்கடவுளாக விளங்குபவள் கொற்றவை தெய்வமாகும். இத்தெய்வம் வீரம் செறிந்தவளாகவும் பிறருக்கு அச்சத்தை தரக்கூடியவளாகவும் உடையவள். மேலும் பேய்க்கூட்டத்தைப் படையாகவும் கொண்டுள்ளாள் என்கிறது புறப்பொருள் வெண்மாலை. படைவீரர்கள் கொற்றவையின் அருளினைப் பாராட்டி மகிழ்கின்றனர். தங்களுடைய வெற்றிக்காரணமான கொற்றவைத் தெய்வத்தை மறவர்கள் வணங்குகின்றனர்.

           “‘‘சூழும் நேமியான் சோ எறிந்த

           “வீழாச்சீர் விறல் மிகுத்தன்று’’(பு.வெ.மாலை.கொளு.9:36)

கருணை குணம் கொண்டவன். உலகத்தை க்காக்கும் தொழிலினைச் செய்பவன்திருமால். போர் மறவர்கள் வெற்றிப் பெற்றதால் அவ்வெற்றிக்கு காரணமான திருமாலைகந்தழி என்னும் துறை மூலம் புகழ்ந்து கொண்டாடுகிறார்கள். மேலும் வெற்றிப் பெற்ற தன்னுடைய அரசனை திருமாலுக்கு நிகராக நினைத்து போற்றுகிறார்கள்.

போர்மறவர்கள் சிவப்பெருமானைப் பூக்கொண்டு வணங்குதலும், முருகக்கடவுளைப் பூச்சொறிந்து வணங்குதலும்செய்கின்றனர். முருகன்வள்ளி இருவரையும் ஒன்றாய் சேர்த்து வணங்கியுள்ளனர். தங்களுடைய அரசன் வணங்கும் தெய்வத்தை மறவர்கள் உயர்த்திபாடி மகிழ்கின்றார்கள்.

           “‘‘வயங்கிய புகழ் வானவனைப்

           “பயன் கருதிப் பழிச்சினர் பணிந்தன்று’’(பு.வெ.மாலை.கொளு.9:40)

உலக இன்பத்தை நுகர்தல் பொருட்டு இறைவனை வணங்கும் பொருட்டு பழிச்சினர் பணிதல் என்னும் துறையாக அமைகின்றது. போர்மறவர்கள் இவ்வுலகப் பேறுகளைக்கருதி இறைவனை வாழ்த்தி வணங்குகின்றனர். தெய்வப் பெண்கள் ஆண்தெய்வங்களை விரும்புவது போலமானிடப் பெண்களும் கடவுளை விரும்பியள்ளனர். பண்டையக் காலக்கட்டத்தில் ஆண்களும் பெண்களும் இறைவனை வழிப்பட்டுவந்துள்ளனர். போருக்குச் செல்லும்முன் இறைவனை வழிபடுதலும் வெற்றிப்பெற்ற பின்பு மகிழ்ச்சியில் இறைவனைப் போற்றித்துதித்தலும் உண்டு.

குடிப்பெருமை

உலகம் தோன்றிய போதேவீரத்தின் அறிகுறியாய்வாளோடு தோன்றிய குடி மறவனின் குடி. தமிழ் இனத்தவரே முதல் குடியாவர். புறப்பொருள் வெண்பாமாலையில் குடிநிலை என்னும் துறையில் கரந்தைமறவர்கள் தம்முடைய தொன்று தொட்ட குடிப் பெருமையினைப் பறைச்சாற்றுகிறார்கள்.

           “மண் திணிஞாலத்துத் தொன்மையும் மறனும்

           “கொண்டு பிறர் அறியும் குடிவரவு உரைத்தன்று ’’(பு.வெ.மாலை.கொளு.2:13)

காஞ்சிமறவர்கள் போரின் கண் தமது மறப்பெருமைகளை பெருங்காஞ்சி என்னும் துறையின் வழியாக வெளிப்படுத்துகின்றனர். போரில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போரிட்டமறவனின் ஆண்மைத் திறத்தினைப் போற்றியது.

           “தொல் மரபின் வாட் குடியின்

           “முன்னோனது நிலை கிளந்தன்று ’’(பு.வெ.மாலை.கொளு.3:10)

மறவன் ஒருவன் தான் பிறந்த குடியின் முதல்வனைப் புகழ்ந்துபாடுதல முதுமொழிக்காஞ்சிகூறுகிறது. தொன்று தொட்டு வாளை ஏந்தி போர்ச்செய்கின்றவர்கள் மறவர்குடியே. அக்குடிக்கண் பிறந்த முன்னொனது தந்தையின் பேராற்றலைப் புகழ்ந்து பாடுவதாகும். மரபு மாறாமல் துடிகொட்டு பனுடைய குடிப் பெருமையைப் புகழ்ந்து கூறுகிறது துடிநிலை என்னும் துறை. வேதம் உணர்ந்த பார்ப்பண குடியை மேம்பட எடுத்துரைத்தது பார்ப்பனவாகை ஆகும்.

           “செருமுனை உடற்றும் செஞ்சுடர் நெடுவேல்

           இருநிலம் காவலன் இயல்பு உரைத்தன்று ’’(பு.வெ.மாலை.கொளு.8:16)

இப்பெரிய நிலவுலகத்தைக் காவல் செய்பவன் அரசன். அவன் போர்க்களத்தில் பகைவரை வருத்துகின்ற சிவந்த நெடியவேலினை ஏந்தியவன் ஆவான். அம்மன்னனின் இயல்புகளை மிகுத்து அரசமுல்லை என்ற துறையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அரசனின் நற்பண்புகளையும் எடுத்துக் கூறுவதாகவும் அமைகின்றது. பகைவரை பெறாத போதும் மிகுந்த சினம் கொண்டது மறக்குடி ஆகும். அக்குடி மென்மேலும் உயர்கின்ற ஆண்மைத் தன்மையினையும் ஒழுக்கத்தினையும் ஏறாண்முல்லை என்னும் துறையில் சொல்லப் பட்டுள்ளது.

நடுவுநிலைமையையுடைய சான்றோர்களின் குடிப்பெருமையைக கூறுகிறது. ஒரு வீரமறவன் போரில் இறந்துபட்டான். அப்போது அந்த மறவனின் வீரத்தைப் பார்த்த நட்பு மறவர்களும் பகைமறவர்களும் ஒன்றாய்ச் சேர்ந்து சுற்றி அவனுடைய உடலைப்பார்த்து அம்மறவனின் குடியைப் புகழ்ந்து பேசுகின்றனர் என்னும் செய்தியைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது. ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டாலும் நாகரிகமாகவும் பண்பாடு கொண்டவராகவும் அக்கால மக்கள் விளங்கியுள்ளார்கள் என்பதை அறியமுடிகிறது.

பாராட்டும் பரிசும்

மறவர்களின் வீரச்செயலுக்கு பாராட்டும் பரிசும் அக்காலத்தில் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறு கொடுக்கப்பட்ட பாராட்டுச் செயல்களை மறவர்களும் விரும்பினார்கள். பகை வென்ற மறவனை அரசன் பாராட்டிப் பரசளித்தலை பேராண்வஞ்சி என்னும் துறை கூறுகிறது.

           ‘‘மறவேந்தனில் சிறப்பு எய்திய

           விறல் வேலோர் நிலை உரைத்தன்று ’’(பு.வெ.மாலை.கொளு.3:8)

வெற்றிக்காக விழுப்புண்ணை ஏற்றமறவர்களுக்கு அரசன் முத்துமாலைகளைப் பரிசாகத் தந்து சிறப்பித்துக் கூறுவதனால் மாராயவஞ்சி எனப்பட்டது. அரசனால் சிறப்பிக்கப் பெற்றதனால் அம்மறவர் வெற்றிபொருந்திய வேலினைக் கொண்டவராக இருப்பார். எதிர்நிற்கும் பகைவேந்தர்களுக்கும் படைவீரர்களுக்கும் முன் சென்றமறவன் ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து கூறுகிறது நெடுமொழிவஞ்சி என்னும் துறையாகும். இந்தத் துறையானது தற்புகழ்ச்சி ஆயினும் அவனுடைய வீரச்செயலைப் பிறருக்கு காட்டுவதில் அவன் தயங்கவில்லை. அதன் மூலம் பகைநாட்டு மறவர்களின் மனதளவில் நிலைக்குலைய செய்துள்ளான்.

           ‘‘மைந்து உயர மறம் கடந்தான்

           பைந்தலைச் சிறப்பு உரைத்தன்று ’’(பு.வெ.மாலை.கொளு.4:9)

பகைவரின் வலிமையைக் கெடுத்துத்தம் வலிமை வெளிப்படும்படியாகப் போர்த் தொழில் செய்தவன் காஞ்சிமறவன். வீரமறவன் போர்க்களத்தில் பகைவரால் தலை வெட்டப்பட்டு இறந்தான். அம்மறவனின் தலையைக் கொண்டு வந்த மற்றொருமறவனுக்கு அரசன் பெரும்பொருள் கொடுத்துச் சிறப்பு செய்கின்றான். மேலும் இறந்த மறவனின் புகழைப் பராட்டியும் அவனை நினைத்துமனம் வருந்தி இருத்தலும் உண்டு.

பகைவரின் உயிரை உண்ண மேகம் போல விரைந்து பாய்ந்துவரும் குதிரையின் மாண்பினையும் குதிரைப்படை வீரர்களின் மறமாண்பினையும் எடுத்துக்கூறுவது குதிரைமறம் என்னும் துறையாகும். மதிலைக் காத்துநிற்கும் நொச்சிமறவரின் மறமாண்பினைச் சிறப்பித்துக்கூறுவது எயிற்போர் என்னும் துறையாகும். மன்னனின் பிறந்த நாளன்று வலிய யானைகளையும் சிவந்த பொன்னையும் பரிசாகக்கொடுத்தான். அதனைப் பெற்றுக் கொண்டவர்கள் விருப்பமுடன் மகிழ்ந்திருந்தனர். இந்நிகழ்வினை நாள்மங்களம் என்னும் துறை எடுத்துரைக்கிறது. மன்னர்கள் தன்னுடைய நாட்டிற்காக உயிரைவிட்ட மறவர்களுக்கு பரிசினைக் கொடுத்துப் பாதுக்காத்துக் கொண்டான்.

பங்கிட்டுக்கொடுத்தல் (பாதீடு)

பண்டையக் கால சமூகத்தில் தான் கொண்டு வந்த பொருளினை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. தான் உழைத்த பொருளே ஆனாலும் கவர்ந்து கொண்டுவந்த பொருளே ஆனாலும் ஊர்ப்பொதுவில் வைத்து அவற்றினை பெரியோர்கள் முன்னிலையில் பங்கி ட்டுக் கொண்டார்கள். இந்நிகழ்வினைப் புறப்பொருள் வெண்பாமாலை பாதீடு என்கிறது.

           ‘‘கவர்கணைச்சுற்றம் கவர்ந்த கணநிரை

           அவர்அவர் வினைவயின் அறிந்து ஈந்தன்று ’’(பு.வெ.மாலை.கொளு.1:12)

பகைவர்களைத் தங்களுடைய கொல்லுகின்ற அம்பினை விட்டு கொன்றுவிட்டு அவர்களுடைய ஆநிரைகளைக் கவர்ந்துந்தனர் வெட்சி மறவர்கள். அவ்வாறு கைப்பற்றிவந்த ஆநிரைகளை அவரவர் தகுதி கேற்பப்படை தலைவன் பகிர்ந்து அளித்துள்ளான் என்கிற பாதீடு என்ற துறை. பகைவரைத் தம்படையினரால் வெற்றி கொண்டவன் வஞ்சிவேந்தன். அவன் தம்மறவர்களால் பகைவர்கள் மேலும் மேலும் அழிவுற வேண்டுமென நினைத்தான். அதற்காகத் தம்மறவர்களை பாணர்கள் புகழவும் வீரமுரசு ஆராவாரிக்கவும் புகழ்ந்தான். அரிவாள் போன்று வளைந்த கோடுகளை உடைய புலியை ஒத்தவர்களான வீரமறவர்கள் உரியவரிசை முறையில் அழைத்து அவர்களுக்கு வேண்டுமளவிற்கு பெருஞ்சோற்றுத் திரளை நிறையக் கொடுத்தான் என்கிறது பெருஞ்சோற்றுநிலை என்னும் துறையாகும்.

தேன்மிகுந்து நறுமணம் வீசும் கள்ளினைக்காஞ்சி வேந்தன் தன்னுடைய வீரர்களுக்கு வயிறு நிரம்ப கள்ளினை ஊற்றிக் கொடுத்தான். மேலும் பகைநாட்டு வீரர்களுக்கும் ஊருக்கு வெளியேகள் கிடைக்கப் பெற்றது என்கிறது கட்காஞ்சி என்னும் துறை. தனக்கு கிடைத்ததைத் தான் மட்டும் உண்டு அனுபவிக்காமல் பிறருக்கும் கொடுத்து அவனையும் மகிழ்ச்சிப் படுத்தியுள்ளான் என்பதை அறியமுடிகிறது.

கூத்துக் கலைகள்

நாள் முழுவதும் வேலை என்று இருந்தவனுக்கு ஓய்வு தேவைப்பட்டது. ஓய்வில் மனமகிழ்ச்சியை எதிர்ப்பார்த்தான். அதனால் இசையொடு ஆடியும் பாடியும் தன்னை மகிழ்ச்சியாக்கிக் கொண்டான். பகைவரின் ஆநிரைகளைக் கவர்ந்த செல்லும் போது பற்பல இசைக்கருவிகளை முழங்கியும் ஆராவாரித்தும் செல்லுவார்களாம். அவ்வாறு இசைக்கப்பட்ட இசைக்கருவிகளில் முதன்மையாக வைக்கப்பட்டது துடி என்னும் கருவியாகும். போருக்குச் செல்லும் படையினருக்கு ஊக்கம் தருவதாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது.

           ‘‘தொடு கழல் மறவர்தொல் குடிமரபில்

           படுகண் இமிழ்துடிப் பண்பு உரைத்தன்று’’(பு.வெ.மாலை.கொளு.1:17)

என்று துடிநிலை என்னும் துறைவிளக்குகிறது. அடுத்ததாக கிணை என்னும் தோற்கருவியைக் குறிப்பிடுகிறார்கள். கிணை - தடாரிப்பறை. வேளாண் புகழை எடுத்துரைப்பது. கிணை என்னும் இசைக்கருவியை இசைத்ததற்காக மன்னனிடமிருந்து கைநிறையப் பொருட்களைப் பெற்றுக் கொண்டான் என்கிறது கிணைநிலை என்னும் துறையாகும்.

           ‘‘வால் இழையோர் வினை முடிய

           வேலனொடு வெறி ஆடின்று ’’(பு.வெ.மாலை.கொளு.1:19)

வெண்மையான அழகிய அணிகலன்களை அணிந்தவர்கள் மறக்குடி மகளிர்கள். அப்பெண்கள் தம் கணவர்கள் மேற்கொண்ட தொழில் நன்றாக முடிய வேண்டும் என எண்ணினார்கள். அதற்காகக் வேலனோடு கூடி வள்ளி என்கிற கூத்தினை ஆடினார்கள். இவ்வாட்டத்தினை வெறியாட்டு என்பர். ஒரு வீரமறவன் போர்க்களத்தில் இறந்து பட்டான். அவனைச் சூழ்ந்து வலிமை பொருந்திய தோளினை உடையதும் பைமறவர்கள் மகிழ்ச்சிகளிப்புடன் வாளேந்தி ஆடியதை ஒள்வாள்அமலை கூறுகிறது. மறவர்கள் சூழ வெற்றிப் பெற்றவனைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள். அரசனின் தேர்க்கு முன்பும் பின்பும் வெற்றியை நுகர்ந்து குரவைக்கூத்தினை ஆடிமகிந்தனர். அதேபோல் பேய் மகளிரும் தேருக்கு முன்பும் பின்பும் ஆடுகின்றார்களாம்.

           ‘‘பூண்முலையார் மனம் உருக

           வேல் முருகற்கு வெறி ஆடின்று ’’(பு.வெ.மாலை.கொளு.9:37)

மகளிர்கள் முருகனுக்காக வள்ளிக் கூத்தினை ஆடி மகிழ்நதனர். வள்ளிக் கூத்து என்பதற்கு வெறிக் கூத்து என்று அழைப்பர். இறைவன்பால் விருப்பம் கொண்டு ஆடுகின்ற ஆட்டம் சிறந்த பயனைக் கொடுக்கும். அதனால் மனதை மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டவர இவ்வாறான ஆட்டங்கும் கூத்துகளும் மனிதனுக்கு தேவைப்பட்டது எனலாம்.

நற்சொல் கேட்டல்

நல்ல சொற்கள் ஒருமனிதனை வாழவைக்கும். மனதை நிறைவடையச் செய்யும். நம்முடைய பயணம் விஷேச நாட்களின் போதும் நல்ல சொற்களும் வார்த்தைகளும் மனம் மகிழ்ந்து இன்னும் உத்தியோகமாக வேலை செய்ய தூண்டும். விரிச்சி என்கிற துறையில்,

           ‘‘வேண்டிய பொருளின் விளைவு நன்கு அறிதற்கு

           ஈண்டு இருள்மாலைச் சொல் ஓர்த்தன்று’’(பு.வெ.மாலை.கொளு.1:2)

தாம் மேற்கொள்ளும் செயலின் நிலையை அறியும் பொருட்டுச் சொல்லை ஆராய்தலே ஆகும். வெட்சிமறவர்கள் ஒன்றுகூடி ஓரிடத்தில் கூடினார்கள். தாம்விரும்பிய அச்செயலானது இனிதாக நிறைவேற வேண்டும் என்று எண்ணினார்கள். அதற்காக இருள் வருகின்றமாலைப் பொழுதில் நற்சொல்லினைக் கேட்டு ஆராய்ந்து அறிந்து கொள்வார்கள். அதன் பிறகு தான் செல்லும் இடத்திற்குச் செல்வார்கள். ஒரு சில நேரங்களில் தீயநிமித்தங்களும் நடைபெறுவதுண்டு. ஆனாலும் மறவர்கள் சென்றே ஆகவேண்டும் என்ற நிர்பந்தம். அம்மறவர்கள் மனவலிமையைக் கொண்டு வெற்றியும் அடைந்துள்ளார்கள் எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.

ஒற்று அறிதல்

ஆழம் தெரியாமல் காலைவிடக்கூடாது என்றொரு பழமொழி உண்டு. அதனால் பகையரசனின் பலம் அறிந்துகொள்ளாமல் போருக்குச் சென்றால் தோல்வியை மட்டுமே சந்திக்க நேரிடும். அதனால் பகைநாட்டின் சூழலை நன்கு அறிந்து கொள்ளும் தன்மை நன்மை பயன்தக்கது. அதனால் அக்காலத்தில் சூழலை அறிந்து வருவதற்கென்றே வீரர்களை நியமித்திருந்தனர். இவர்களை ஒற்றர்கள் என்று sஅழைப்பார்கள்.

           ‘‘பற்றார் தம்முனைப் படுமணி ஆயத்து

           ஒற்று ஆராய்ந்தவகை உரைத்தன்று ’’(பு.வெ.மாலை.கொளு.1:4)

ஒற்றர்கள் பகைநாட்டின் அவர்கள் அறியாதவாறு அம்மக்களுக்குள்ளே சென்று தங்குவர். அம்மக்கள் அறியா வண்ணம் ஆநிரைகள் இருக்கின்ற இடம், ஆநிரைகளின் எண்ணிக்கை, அவற்றினைக் காக்கின்ற வில்மறவர்களின் அளவு ஆகியவற்றை ஆராய்ந்து வருவார்கள் என்கிறது வேய் என்னும் துறையாகும். இது மட்டுமன்று மன்னர்களின் அரசியல் போக்குகளையும் ஆராய்ந்து வருதலும் உண்டு. பரிசுகள் ஒற்றர்களுக்கு பிறமறவரைக்காட்டிலும் மிகுதியாகக் கொடுக்கப்பட்டது. இது ஒற்றர்களுக்குச் சிறப்பு செய்வதினால் இது புலனெறி சிறப்பு என்றாயிற்று. ஒற்றர்களின் பணிமிகவும் கடுமையானது. பகையரசனிடம் மாட்டிக் கொண்டால் ஒற்றரை துன்புறுத்தி கொன்று விடுவார்கள். ஆனாலும் தம்நாட்டை காப்பாற்றுவதற்காக மறவர்கள் ஒற்றர் வேலையை செய்துவந்துள்ளனர்.

போர்க்கருவி

போர்களில் சண்டையிடுவதற்காக நிறையப் போர்க்கருவிகளை மறவர்கள் வைத்திருந்தனர். மறவர்களின் இடையில் எப்பொழுதும் ஆயுதம் இருக்கப் பெற்றிருக்கும்.

           ‘‘வென்றியோடு புகழ்விளைக்கும் எனத்

           தொன்றுவந்த தோல் மிகுத்தன்று ’’(பு.வெ.மாலை.கொளு.6:11)

உழிஞையரசன் தனது கிடுகுப் படையைப் பாராட்டியது. இதனை தோல் உழிஞை என்னும் துறையைாகும். தோல் என்பது கிடுகு என்னும் ஒருவகைப் போர் கருவியாகும். வட்டவடிவில் அமைந்து கண்ணாடி நிரைத்ததால் ஒளிரும் தன்மை கொண்டது கிடுகுப்படை. அதன் துணைக் கொண்டதன்னிடம் பணியாத அரணினைக் கைப்பற்றுவது எளிது என்பதும் அதன் புகழை உலகறியச் செய்ய வேண்டும் என்பதுதான்.

உழவர்கள்

உழவர்கள் வாழ வேண்டும். விவசாயம் பெருக வேண்டும். நம் நாட்டின் வளத்தை பெருக்கி மூன்று வேளையும் வயிறு நிரம்ப உண்ணவேண்டும். கிணைநிலை என்னும் துறையில்,

           ‘‘தண்பணை வயல் உழவனைத்

           தெண்கிணை வன்திருந்து புகழ்கிளந்தன்று ’’(பு.வெ.மாலை.கொளு.8:30)

குளிர்ச்சி பொருந்திய தன்மை கொன்டது நன் செய்நிலம். நிலத்தை உழுதுமக்களுக்கு பயன்விளைப் போர் உழவர்கள் ஆவார்கள். அவர்கள்இவ்வுலகத்தில்மேலானபுகழினைஉடையவர்கள்ஆவார்கள். அப்படிப்பட்ட உழவர்களை வாழ்கவென்று கிணைப்பறையை அடித்து வாழ்த்தி வறுமை நீங்க வேண்டுமென உரக்கக் கூறுதல். நெல் அறுவடை முடிந்ததும் உழவர்கள் தம்குடிகளுக்கு தக்கவாறு நெல்லினைக் கொடுப்பார்கள். அது அவர்களின் ஆண்டு முழுவதும் உணவு பஞ்சமின்றி வாழ வழிவகைச் செய்யும். அரணை அழித்து கழுதை பூட்டிவர கைவிதைப்பது பற்றி உழுதுவித்திடுதல் கூறுகிறது. உழவனை எருதோடு ஒப்பிட்டுக் கூறுகிறது பகட்டு முல்லை என்னும் துறை.

           ‘‘செறு தொழிலின் சேண் நீங்கியான்

           அறு தொழிலும் எடுத்துரைத்தன்று ’’(பு.வெ.மாலை.கொளு.8:9)

அறுவகைத் தொழிலினையும் சிறக்கச் செய்கின்றவணிகர்கள் தம் மேம்பாட்டைக் கூறுவது வாணிகவாகை ஆகும்.

 

அறுவகைத் தொழில்கள் :

  • நிலத்தை உழுது அதன் பயனாகிய விளைப் பொருட்களைக்கைக் கொள்ளுதல்
  • ஆராவாரிக்கின்ற ஆநிரைகளைப் பாதுகாத்தல்
  • குற்றமற்ற பொருட்களை விற்றல்
  • கற்பதற்கு உரியவற்றை முற்றும் கற்றல்
  • முத்தீயைப் போற்றி வணங்குதல்
  • தம் பொருளை சீர்தூக்கிப் பாராமல் பிறருக்குவழங்குதல்

என இவ்வாறு தன்மைகளை உடையவர்கள் வணிகர்கள் என்கின்றார் ஐயனாரிதனார்.

அறம் செய்வித்தல்

இருக்கின்றவன் இல்லாதவனுக்கு உதவ வேண்டும். கிணற்றில் தண்ணீர் இறைக்க இறைக்க எவ்வாறு தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்குமோ அது போல செல்வமும் கொடுக்க கொடுக்க நிறைந்து கொண்டே செல்லும்.

           ‘‘புகழோடு பெருமை நோக்கியாரையும்

           இகழ்தல் ஓம்பு என எடுத்துரைத்தன்று ’’(பு.வெ.மாலை.கொளு.8:11)

ஒருவர்க்குப் புகழும் பெருமையும் உண்டாகும். அவ்வொருவர் தன்னுடைய புகழையும் பெருமையையும் பிறரோடு ஒப்பிடுவர். அதன் காரணமாகப் பிறர்யாரும் தனக்கு நிகரில்லை என எண்ணி மகிழ்ந்து பிறரை எள்ளி நகையாடவும் செய்வர். அவ்வாறு எவரையும் இகழ்தலை தவிர்க்க வேணடும் என பொருநவாகை கூறுகிறது. துறவியரின் தவநெறி பிறழாத வாழ்வினைப் போற்றி உரைப்பது தாபதவாகை ஆகும். அரசர்களுக்குள் மாறுபாடு தோன்றும் போது அம்மாறுபாட்டினைத் தவிர்த்து நன்மை செய்வதற்கு நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் சந்து செய்வித்தலைச் செய்வார்கள் என்று பார்ப்பணமுல்லை கூறுகிறது. விண்ணை தீண்டுமாறுயர்ந்து நிற்பது மலை. நல்லியல்பால் உயர்ந்து நிற்பவர் சான்றோர்கள். அறம் பயிற்றுவிக்கின்ற அச்சான்றோர்களின் மேன்மையைக் கூறுவது சால்புமுல்லை என்னும் துறையாகும்.

           ‘‘வையகத்துவிழைவுஅறுத்து

           மெய்யாயபொருள்நயந்தன்று ’’(பு.வெ.மாலை.கொளு.8:31)

உலகின் கண் பலபொருட்கள் உள்ளன. அவற்றின் பொய்யான பொருள்மீது பற்றுக் கொள்ளுதலை விட வேண்டும். மெய்யான பொருளாகிய இறைவன் மீது பற்றுவைக்க வேண்டும் என பொருளோடு புகறல் துறை கூறுகிறது. மீண்டும் பிறவிச் சுழற்சியில் உழலாமல் உலகப்பற்றை விட்டு அருளாகிய நன்னெறியினைப் பற்றுதலை அருளோடு நீங்கல்துறை விளக்கம் தருகிறது. பழமையான நூல்கள் கூறுகின்ற நெறியினை அடிப்படையாக வைத்து பிற உயிர்களிடத்து அருளுடைமையே அறம் என்று கூறப்படுகிறது.

பூமரம்

புறப்பொருள் வெண்பாமாலை இலக்கண நூலில் பூக்களும் மரங்களும் சுட்டப் பட்டுள்ளன. போர் மறவர்கள் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை ஆகிய பூக்களைச்சூடி போருக்குச் சென்றிருக்கிறார்கள்.

  • காயாம் பூவினைப் புகழ்ந்து கூறுவது - பூவைநிலை (தற்காலத்தில் காசாம்பூ வழங்கப்படுகிறது)
  • சிவன் சூடிய உழிஞை பூவினைப் புகழ்ந்து கூறுவது - முற்றுழிஞை
  • முருகன் சூடிய காந்தள் பூவின் சிறப்பினைக் கூறுவது- காந்தள்
  • சேரர் அடையாளமாகச் சூடுகின்ற பூ - போந்தை
  • சோழர் அடையாளமாகச் சூடுகின்ற பூ - ஆர்
  • பாண்டியர் அடையாளமாகச் சூடுகின்ற பூ - வேம்பு
  • உன்னம் என்னும் மரத்தின் நிலையினைக் கூறுவது - உன்னநிலை

போர்க்களத்தில் தன்னுடைய நாட்டுக்காகப் போரிடுகின்ற மறவர்கள் பூவைச் சூடுதலும் தோல்வியினால் வாடுதலும் உண்டு.

 

விலங்குகள்

புறப்பொருளில் ஒரு சில விலங்குகளின் பெயர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. போர்க்காலங்களில் யானைகள் அதிகளவு பயன்படுத்தப்பட்டுள்ளது. நொச்சியாரின் யானைகளை உழிஞை மறவர்கள்கைப் பற்றுவது யானைகைகோள் என்கிறது.

           ‘‘எறிபடையான் இகல் அமருள்

           செறிபடைமான் திறம் கிளந்தன்று’’(பு.வெ.மாலை.கொளு.7:3)

தும்பை அரசனுடைய இளம்களிறு மிகுந்த வீரத்தைக் கொண்டது. அந்த யானையானது சினந்து வந்தது பற்றி கூறியது யானைமறம் என்பதாம். வீரமறவன் ஒருவன் யானையின் மீது வேலினை எரிகின்றான். யானையை வீழ்த்திய அவனின் வீரத்தை இவ்வுலகம் கண்டுவியக்கிறது.

கழுதையைப்பூட்டி ஏர் உழுதுவர கைவிதைத்துள்ளார்கள். தும்பை அரசனடைய கதிரைகளின் திறத்தை மிகுத்துச் சொல்லுவது குதிரைமறம் என்னும் துறையாகும். எங்கள் அரசன் நாங்கள் மகிழும் பொருட்டு எங்களுடைய வீட்டின்முன் ஆட்டின்மீது ஏறிவிளையாடுதலை ஏழகநிலை கூறுகிறது. உழவனை எருதோடு ஒப்பிட்டு குறிப்பிடுகிறது பகட்டுமுல்லை எனும் துறையாகும். விலங்குகள் மக்களின் வாழ்க்கைக்கு எந்தளவிற்கு உதவியாகவும் பிரிக்க முடியாதவையாகவும் இருந்து வந்துள்ளன என்பதை அறிய முடிகிறது.

புறப்பொருளில் இடம்பெறும் இடங்கள்

மக்கள் வாழும் இடங்கள், புழங்குகின்ற இடங்கள், போர்நடைபெறும் இடங்கள் என ஒரு சில இடங்களைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

  • காவற்காடு, அகழி – உழிஞைமறவர்கள் நொச்சியாரின் காவற்காட்டைக் கடந்து அகழியை அடைகின்றனர்.
  • மதில் – செங்கற்களால் கட்டப்பட்டதும் நொச்சியாரின் நீண்ட மதிலாகும். உழிஞை மறவர்கள் மதிலைவிட்டு அகலாமல்நின்றனர்.
  • பாசறை – பகைவர் நாடு தன் கீழ் அடிமைப்பட்டு இருப்பதற்காகப் பாசறைக்கண் தங்கியிருந்து போர் செய்தல்.
  • விழல் (குடிசை) – பசும்புல் தொகுதியால் வேயப்பட்ட குடிசை.

 

நடுகல்

இவ்வாறாக அக்காலமக்கள் தங்களின் பழக்கவழக்கத்தினை சிறப்புறச்செய்து வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

பயன்படுத்தப்பட்ட பொருட்கள்

பண்டையகால மக்கள் ஒரு சில பொருட்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆண்களும் பெண்களும் பயன்படுத்தி வந்தமை, வீடுகளில் பயன்படுத்தி வந்தமையும் குறிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட பொருட்களை அன்றைய மக்கள் பயன்படுத்தி வந்துள்ளதை புறப்பொருள் வெண்பாமாலை இலக்கணநூலின் வாயிலாக அறியலாம்.

கையறுநிலை

போர்களில் அரசன் முதற்கொண்டு மறவர்கள், யானைகள், குதிரைகள் என இறந்து போகின்றனர். இவர்களுடைய உறவினர்கள் இறந்துபோனவர்களின் துக்கத்தைத்தாளாமல் மனம் வருந்தி நிற்பர். அத்தகையச் சூழலைத் தான் கையறுநிலை விளக்குகிறது.

           ‘‘வெருவரும் வாளமர் விளிந்தோன் கண்டு

           கருவி மாக்கள் கையறவு உரைத்தன்று’’(பு.வெ.மாலை.கொளு.2:9)

தன்னுடைய தலைவனின் இறப்பால் செய்வதறியாது பாணன் திகைத்து கையறுநிலையாய் நிற்கின்றானாம். அதேபோல் பகை நாட்டிற்காக இறந்துபோன மறவர்களை நினைத்தும் வருந்தும் உன்னதபோக்கு நம்மக்களிடையே இருந்து வந்துள்ளது. இறந்து பட்டவர்களுக்காக இறுதிக் கடன்களைச் செய்தலும் சொல்லப்பட்டுள்ளது. போரில் அரசன் கொல்லப்பட்டவுடன் அதை மனம் தாங்காது மறவன் ஒருவன் தன்னுடைய உயிரையும் மாய்த்துக்கொள்ளும் பேரன்பு அக்காலத்தில் இருந்து வந்திருக்கிறது.

           ‘‘காதற்கணவனொடு கனைஎரி மூழ்கும்

           மாதர் மெல்லியல் மலிபு உரைத்தன்று ’’(பு.வெ.மாலை.கொளு.4:19)

கணவனின் இறப்பிற்குப் பின்னர் அவனுடைய மனைவி வாழ அஞ்சுகிறாள். அதனால் போரில் இறந்துபட்ட கணவனுடன், கணவனை அழித்த கருவியால் தானும் குத்திக்கொண்டு உயிரைமாய்த்துக் கொள்கிறாள். இதன் தொடக்கமே பின்னால் உருவாகி பெண்களுக்கு அச்சுருத்தலாக இருந்த உடன்கட்டை ஏறும்வழக்கம் என்பதை இங்கு சுட்டிக் காட்டலாம். போர்க்களத்தில் இறந்துபட்ட கணவனை விண்ணுலகப் பெண்கள் தழுவும்முன்னர் அவனுடைய மனைவிதழுவி நிற்கின்றாள் என்பதை சிருங்காரம் என்னும் துறை விளக்குகிறது. விழுப்புண்பட்டு இறந்த கணவனைக் கண்ட அவன் மனைவி மகிழ்ந்து கண்ணீர் சிந்துகிறாள். தன்னுடைய கணவன் புறமுதுகு காட்டவில்லை என்று பெருமைபடுகின்றாள்.

முடிவுரை

பண்டையகால மக்களின் புறச்செய்திகளைப் புறப்பொருள் வெண்மாலை இலக்கணநூலில் இருந்து வெளிக்கொணரப்பட்டுள்ளன. போர்ச்செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட நூலாக இருப்பினும் அன்றைய மக்களின் பண்பாட்டு நிகழ்வுகளை அழகாகச் சுட்டிக்காட்டியுள்ளார் ஆசிரியர். போரின் காரணமாக மறவர்களும் விலங்கினங்களும் உயிர்விட்டுள்ளனர். அதனால் மறவர்களின் மனைவிமார்கள் தங்களின் உயிரை மாய்த்துக்கொண்டார்கள். ஆண்கள் அதிகம் இறந்துபட்டதால் அக்காலத்தில் பெண்கள் அதிகம் இருந்துவந்துள்ளனர். அதனால்தான் ஆண்கள்குறைவு என்ற போதில் ஒரு ஆணுக்குப் பலமனைவிமார்கள் என்றகட்டமைப்பு வந்துள்ளதை பார்க்கமுடியும். இதற்கு முழுக்காரணமாக மன்னர்களின் பேராசையே காரணமாக இருக்கமுடியும். சங்கஇலக்கியத்தில் புறச்செய்திகளைக் குறைவாகத் தந்ததிலிருந்து அவ்வவ்போதுதான் போர்நடந்திருக்கக்கூடும். அவ்வாறு நடந்திருக்கும் போர்களில் உண்மைத்தன்மையும் நியதியையும் கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது.

 

           . 1. திருஞானசம்பந்தம்.ச., - புறப்பொருள் வெண்பாமாலை கதிர் பதிப்பகம், தெற்குவீதி, திருவையாறு - 613 204. முதல்பதிப்பு - 2006

           2. இறையரசன்.பா., - தமிழர் நாகரிக வரலாறு பூம்புகார் பதிப்பகம், சென்னை - 600 108, முதற்பதிப்பு - 1993.

           3. மகாதேவன்.கதிர்., - ஒப்பிலக்கிய நோக்கில் சங்ககாலம் மதுரை, 2- ம்பததிப்பு - 1977

           4. தேவநேயப்பாவாணர்.ஞா., - பழந்தமிழாட்சி தமிழ் மண்பதிப்பகம், சென்னை - 14

           5. ஆறுமுகம்.அ., - வாழ்க்கை இலக்கியம் பாவேந்தர் பதிப்பகம், திருமழபாடி - 621 851

           6. பாக்யமேரி., - காலந்தோறும் தமிழர் கலைகள் அறிவுப் பதிப்பகம், சென்னை - 14

           7.சிதம்பரனார்.சாமி., - எட்டுத்தொகையும் தமிழர்பண்பாடும் அறிவுப் பதிப்பகம், சென்னை - 14

           8.சுப்பிரமணியன்.ந., - சங்ககால வாழ்வியல் NCBH, சென்னை - 98.

           9.பிள்ளை.கே.கே., - தமிழகவரலாறு மக்களும்பண்பாடும் உலகத்தமழாராய்ச்சிநிறுவனம், தரமணி, சென்னை - 113. பதிப்பு - 2004

           10.சேதுபிள்ளை.ரா.பி., - தமிழகம் அலையும் கலையும் பழனியப் பாபிரதர்ஸ், சென்னை - 5 முதல்பதிப்பு- நவம்பர் - 1958

  • இறந்தவனுக்குக் கல்நிறுத்த நல்ல கல்லினைத் தேர்ந்தெடுத்தல் - கற்காண்டல்
  • தேர்ந்தெடுத்த கல்லை பலசடங்குகள் செய்வது - கற்கோள்நிலை
  • நடுகல்லை நீரில் போட்டுவைத்தல், நடுதற்குரிய இடத்தில் சேர்த்தல் - கல்நீர்ப்படுத்தல்
  • வீரமறவரின் நினைவாகக் கல்லை நடுதல் - கல்நடுதல்
  • நட்ட கல்லினை வாழ்த்துவது - கல்முறைபழிச்சல்
  • கோயிலை எழுப்பி நடுகல்லை எடுத்துச்செல்வது - இற்கொண்டுபுகுதல்
    • ஏணி – மதிலை தாண்டிச் செல்ல ஏணியைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
    • முரசு – மாற்றரசனின் முரசொலியைக் கேட்டு மிகுந்தசினம் கொண்டான் மன்னன். வெற்றிக்காகவும் முரசினை ஒலித்து ஆராவாரம் செய்துள்ளார்கள்.
    • வாள் – வேந்தனின் வாளை புனித நீராட்டுவது. வாளினைப் போர்க்களத்திற்கு எடுத்துச் செல்லுதல். அரசனின் வெற்றி வேளினைச் சிறப்பித்துக் கூறுவது.
    • கழல்- போர்மேற் செல்லுவோர் வீரக்கழல் அணிந்து செல்வார்கள். அரசனின் வீரக்கழலைப் புகழ்ந்து கூறுவது.
    • செங்கொல் – வாகைவேந்தனின் செங்கோல் சிறப்பை எடுத்துரைப்பது. செங்கொல் மன்னனை உழவனாக உருவகம் செய்தல்.
    • குடை – காஞ்சியரசன் தன் குடையைப் போர்க்களத்திற்குச் செல்ல விடுவது. அரசனின் வெற்றிக் குடையைச் சிறப்பித்துக் கூறுவது.
    • தேர் – தும்பை அரசனின் தேர் வலிமையைக் கூறுவது.
    • விளக்கு – அரசனுடைய திருவிளக்கு நிலையைக் கூறுதல்.
    • அரியணை – அரசன் வீற்றிருந்த அரியணைச் சிறப்பைக் கூறுவது.
    • முதுபாலை - பாலை நிலத்தில் தன்னுடன் வந்த கணவன் இறந்ததால் தலைவி வருந்ததல்.
    • சுரநடை – காட்டில் மனைவியை இழந்த கணவன் வருந்தவது.
    • தபுதாரநிலை – மனைவியை இழந்த கணவன் வருத்தத்துடன் தனியே வாழ்வது.
    • தாபதநிலை – கணவனை இழந்த பெண்கைம்மை நோன்பினை மேற்கொள்வது.
    • தலைப்பெயல்நிலை – குழந்தையைப் பெற்றெடுத்த பெண் இறந்ததைக் கூறுவது.
    • பூசல்மயக்கு – போரில் இறந்த சிறுவயது மறவனின் சுற்றந்தார் அழுது ஆராவாராம் செய்வது. மன்னன் இறந்ததற்கு வருந்துதலும் ஆகும்.
    • மாலைநிலை – கணவனை இழந்ததால் உயிர்விடக்கருதிய மனைவி மாலைப்பொழுதில் தீப்புக நின்றது.
    • மூதானந்தம் – இறந்த கணவனோடு சேர்ந்து உயிர்விட்ட தலைவியின் நிலையைக் கண்டோர் புகழ்வது. ( உடன்கட்டை இதனால் தான் உண்டாகியிருக்கும்)
    • ஆனந்தபையுள் – போரில் இறந்த கணவனை எண்ணி மனைவி மிகவும் வருந்துவது. இறந்தோரது புகழினை அன்பின் காரமாக எடுத்துரைப்பது.