அகவாழ்வியலில் செவிலி
ஆய்வுச்சுருக்கம்
அக இலக்கியங்களில் வரும் மாந்தர்களுள் சிறப்பாகக் கருதத்தக்கவருள் ஒருவர் செவிலியும் ஆவாள். அக இலக்கியங்கள் நற்றாயைவிட செவிலிதாய் பேசுவதாகக் காட்டும் இடங்களே அதிகமாகக் காணப்படுகின்றது. தனது தோழியின் மகளைத் தன் மகளாகப் பாவித்து அவள் வாழ்க்கை மேம்படவும், அலர் ஏற்படாவண்ணம் அவளைக் காப்பதும், தம் குலப்பெருமை கூறி இற்செரிப்பதும், வேலன் வெறியாட்டு நிகழ்த்துவதும் என்று தலைவியின் வாழ்க்கையில் களவு, கற்பு என்ற இரண்டு நிலையிலும் முழுமை தன்னை அற்பணித்துக் கொள்ளும் ஒரு பாத்திரமாகவே காட்டப்படுகிறாள் செவிலியின் குடும்பம் பற்றியோ அவளுடைய கணவன் பற்றி எந்த இலக்கியமும் சுட்டவில்லை. ஆகையால் தலைவியின் வாழ்க்கைக்காகவே தனது வாழ்க்கையினை அற்பணித்து வாழும் செவிலியின் பாத்திரம் வியக்கத்தக்கது. இதனை நிலை நிறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். மேலும் அவ்வகை கதாபாத்திரத்தின் செயல்பாடுகள்சில அக இலக்கியத்தில் இருந்து எடுத்துக்காட்டப்பட்டுத் தோழி போன்றே செவிலியும் முதன்மை பாத்திரம் என்று நிறுவப்பட்டுள்ளது.
திறவுச்சொற்கள்:அகத்திணை,செவிலி,அகநூல்கள்,சங்கஇலக்கியங்கள்,உடன்போக்கு
முன்னுரை
தொல்காப்பியர் கூறும் அகத்திணை மாந்தர்களுள் சிறப்பாகக் கருதத்தக்கவருள் செவிலி ஆவாள். நற்றாயைவிடச் செவிலித்தாயும், தோழியும் தலைவியின் காதல் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். செவிலி பற்றித் தொல்காப்பியம் மற்றும் சங்க அக இலக்கியத்தின்வழி ஆராய்தலே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.தலைவி தலைவனுடன் உடன்போக்கு என்ற சூழ்நிலையிலும் செவிலியின் கூற்று நிகழ்கிறது.
தொல்காப்பியத்தில் செவிலி
தொல்காப்பியர் களவியல், கற்பியல் ஆகிய இரு இடங்களில் செவிலியின் சிறப்பு இயல்புகளை எடுத்துரைக்கின்றார்.
“ஆய்பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலின்
தாயெனப்படுவாள் செவிலியாகும்”
(தொல், பொருள், களவு – 112)
என்கிறார். நல்ல பெரிய சிறப்புகளை உடைய அறிதற்குரிய மறைப்பொருள் யாவற்றையும் கூறும் கடப்பாடு உடையவளாதலின் தாய் எனப்படுவாள் செவிலி என்று கூறுகின்றார்.
தலைவன் தலைவியின் ஒழுகலாறு அயலாருக்குப் புலனாகி அலர் தூற்றப்பட்டவிடத்து தலைவி மாட்டு உள்ளதாகிய வேட்கை அளவிற்கு அதிகமாக இருக்கும் பொழுதும் புணர்ச்சியால் தலைவியின் உடல் மாறுபாடு அடைந்துவிட்டதும், தலைவனோடு தலைவியைத் தலைப்பெய்து காணினும் ----- வைப்பித்த வழியும், செவிலியும் நற்றாயும் தலைவியின் நிலைகண்டு வெறியாட்டு மேற்கொண்ட பொழுதும் காதல் மிகுதியால் தலைவனை எள்ளிக் கனவின் கண் அரற்றுதற் கண்ணும் இவை நிமித்தமாகத் தோழியை வினாதலும், தெய்வத்தை வேண்டியும், தலைவன் வரையாது பிரிந்தவழி ஒழிந்த தலைமகள் அலராடுதலும் இன்றி வேறுபாடும் இன்றி, ஒரு மனப்பட்டிருந்த உள்ளக் கருத்தினை அறிந்த வழியும், தலைவன் குடிமை தன் குடிமையோடு ஒக்குமென அறைதற் கண்ணும் என்று இவ்வாறாக பதின்மூன்று நிலைகளில் செவிலி கூற்று நிகழும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
(தொல், பொருள், களவு – 113)
“கிழவோன் அறியா அறிவினள் இவளென
மையாறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின்
ஐயக் கிழவியின் அறிதலும் உரித்தே”
(தொல், பொருள், களவு – 113)
என்று நற்றாய் செவிலித்தாய் பற்றித் தொல்காப்பியர் எடுத்துரைக்கின்றார்.
“தாய் அறிவுறுத்தல் செவிலியோ டொக்கும்”
(தொல், பொருள், களவு – 136)
நற்றாய் களவொழுக்கம் அறிவுறுத்தல் செவிலியோடு ஒக்கும் என்றும் எடுத்துரைக்கின்றார்.
”கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள
நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்
செவிலிக்குரிய ஆகும் என்ப”
(தொல், பொருள், களவு – 000)
என்பதால் இறந்த காலத்தினும் நிகழ்காலத்தினும் எதிர்காலத்தினும் நல்லவை கடிதலும் அல்லவை கடிதலும் செவிலிக்கு உரியவை என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.
அறத்தொடு நிற்றல்
தலைவியின் செயல்பாடுகளில் மாற்றத்தினைத் தனது நுண்ணுணர்வினால் அறிந்த செவிலித்தாய் நற்றாயிடம் அறத்தொடு நிற்கின்றாள்.
“பறைபடப் பணிநிலம் ஆர்ப்ப இறை கொள்பு
தொல்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய
நூல் ஊர்க் கோசர் நல்மொழி போல
வாய் ஆகின்றே தோழி ஆய்கழல்
செயலை வெள்வேள் விடலையொடு
தொடுவளை முன்கை மடந்தை நட்பே” (குறுந் – 15)
இப்பாடல் தலைவி உடன்போக்கு போன பிறகு தோழி செவிலித்தாயிடம் அறத்தொடு நிற்கின்றாள். பிறகு செவிலித்தாய் நற்றாயிடம் அறத்தொடு நிற்கின்றாள் மேற்கூறிய பாடல் செவிலி அறத்தொடு நிற்றலுக்கும் கான்றாகக் காட்டத் தக்கதாகும்.
இற்செறிப்பு
தலைவி தலைவனோடு களவொழுக்கம் புரிதலை அறிந்த செவிலி தலைவியை மறைமுகமாக இற்செறிக்கின்றாள். ஊரில் அலர் தூற்றப்படுவதாலும் தலைவியிடத்து காண்பதாலும் இந்நிகழ்வினைச் செவிலி செய்விக்கின்றாள்.
அன்னையு மறிந்தன அலரும் ஆயிற்று
நன் மறை நெடுநகர்”
என்ற இப்பாடலில் எங்கள் தாயும் நமது கள ஒழுக்கத்தை அறிந்து கொண்டாள். ஊர் முழுவதும் பழிச் சொல்லும் பரவுகிறது. இதுகாறும் இன்பமாக இருந்த எங்கள் வீடும், நாங்களும் தனிமைத் துயரத்தை அனுபவிக்க ஏற்றதாகிவிட்டது என்று தலைவி தலைவனிடம் புலம்புகின்றாள்.
“புன்னை ஓங்கிய துறைவனொடு அன்னை
தான் அறிந்தன்றோ இவனே பானாள
சேரி அம் பெண்டிர் சிறுசொல் நம்பி
கடுவன் போல நோக்கும்
அடுபால் அன்னஎன் பசலை மெய்யே”
எனும் இப்பாடலில் தலைவனோடு கொண்ட உறவை இதுவரை அன்னை அறியவில்லை எனினும் பாதிநாள் இரவில் சேரியின் அழகிய பெண்டிர் சிறு சொல்லாகிய அலரை நம்பிக் காய்ச்சிய பால் போன்ற என் பசலை படர்ந்த உடலைச் சுடுதல் போல அவள் நோக்குவாள். இவ்வாறு அலர் காரணமாகவும் தாய், தலைவியின் களவினை உணர்கின்றாள் என்பது கூறப்படுகின்றது.
வெறியாட்டு
தலைவி தினைபுனம் காக்கச் செல்கின்றாள். சென்ற இடத்தில் தலைவனுடன் நட்பு ஏற்பட்டுப் பின்னர் களவு நிகழ்கின்றது. ஆனால் தாய் சென்ற இடத்தில் தலைவிக்கு அணங்கு ஏறப் பெற்றாள் என்று எண்ணி வேலனை அழைத்து வெறியாட்டு நடத்துவது கூறப்படுகின்றது.
குழந்தை பராமரிப்பு
செவிலி தலைவியை அரவணைத்து வளர்த்ததோடு மட்டுமல்லாமல் தலைவியின் குழந்தையையும் அரவணைத்து அன்பு காட்டி வளர்க்கும் நிலையினையும் கீழ்வரும் பாடலடிகள் புலப்படுத்துகின்றன.
“வெறி உற விரிந்த அறுவை மெல் அணைப்
புளிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
பசுநெய் கூர்த்த மென்மை யாக்கைச்
சீர்கெழு மடந்தை ஈர் இளம் பொருந்த” (நற் – 40:5-9)
இப்பாடலில் நறுமணம் உண்டாக விரிந்திருந்த நூலாடை உடைய மெல்லிய படுக்கையில் அண்மையிற் பிறந்த புதல்வன் செவிலி அருகில் உறங்குகிறாள். சிறப்புமிக்க தலைவி வெண்சிறு கடுகு அணிந்த நெய்யாட்டு நிறைவேறிய அண்மைக் காலத்தில் பசியநெய் விளங்கும் மெல்லிய உடம்போடு இரு இமைகளும் பொருந்தத் தூங்கிக் கிடந்தாள் என்று தலைவியின் மகள் செவிலித்தாய் அருகில் உறங்கியதாகக் கூறப்படுகின்றது.
உடன்போக்கு! தலைவன் தலைவி ஆகிய இரு குடும்பத்தார் தரும் திருமணத்திற்கு உடன்படாதபோது உடன்போக்கு நிகழும். உடன்போகிய தலைவியை நினைந்து மனையிலிருந்து புலம்புதல் தாய்க்கு உரியதாகவும் மனையிலிருந்து புலம்புதல் மட்டுமின்றிப் பின் சென்று தேடுதல் செவிலிக்குரியதாகவும் அமைகின்றன.
“ஏமப் பேரூர்ச் சேரியும் சுரத்தும்
தாமே செய்யும் தாயுமட் உளரே” (தொல், அகத் – 37)
நற்றாய் செவிலி இருவரது செயல்களும் உணர்வால் ஒன்றுபட்ட படைப்பில் செயலால் வேறுபடும். தொல்காப்பியர் தாயார் எனக் கூறியமை மனைப் புறத்துச் சென்று தேடிய தாயைச் செவிலி எனப் பாகுபடுத்தக் காரணமாய் இருந்திருக்கலாம். வீதிகளில் சென்று தேடியவர் செவிலி இருந்து புலம்பியவள் தாய் என்று விளக்கம் தருகின்றனர்.
தலைவன் தலைவியிடம் பொய் சொல்லியும் பாராட்டியும் மயக்கிக்கொண்டு சென்றுள்ளான் என்று தாய் கூறுகின்றாள். தலைவனைப் பொய்யன் என்றே கூறுவதைக் காணமுடிகிறது.
“ஏதிலன் பொய்மொழி நம்பி”
“கூர்வேல் விடலை பொய்ப்போகி
சேக்கு வலி கொல் லாதானே”
“மையணல் காளை பொய்புகலாக
அருஞ்சுரம் இறந்தனள்”
என்று செவிலித்தாய் தலைவி தலைவனின் பொய்யுரைகளையும் இன்சொல்லிளையும் நம்பிப் பாலை வழியில் சென்றுவிட்டாள் என்று தலைவனை இழித்துரைத்துத் தலைவியின் எதிர்கால வாழ்வினை எண்ணி வருந்தும் நிலையை அறியமுடிகிறது.
செவிலி – தோழி
தலைவியின் செவிலித்தாய் தோழியின் தாயாவாள். செவிலியின் சிறப்பைப் போற்றும் முறையில் தொல்காப்பியர் தாய் சிறப்பித்துச் சொல்லப்படுபவள் செவிலியே ஆகும் என்று கூறி அதற்குரிய காரணத்தையும் குறிப்பிடுவார்.
“தோழி தானே செவிலியது மகளே” (தொல், பொருள், களவு-123)
செவிலி தோழியின் நற்றாயாகவும் தலைவியின் வளர்ப்புத் தாயாகவும் திகழ்கிறாள். தோழி – செவிலி ஆகியோரின் சொந்த வாழ்வியல் நிகழ்வுகள் இலக்கியத்தில் இடம் பெறாமல் உள்ளது. தலைவிக்கு அமைந்த தோழியைச் செவிலி படைக்கப்பட்டுள்ளாள்.
செவிலியின் கணவனைப் பற்றிய குறிப்புகள் ஏதும் இடம் பெறவில்லை. தலைவிக்குள்ள உரிமைகள் அனைத்தும் தோழிக்குத் தருவதைப் போன்று நற்றாய்க்குள்ள உரிமைகள் அனைத்தும் செவிலிக்கும் வழங்கப்படுகின்றன. ஒரு குடும்பத்தில் பிறந்த இரு தலைமுறையினர் தலைமக்கள் வாழ்வில் பெரும்பங்கு கொண்டு அவர்கள் செவிலியும் தோழியும் ஆவார்.
“அரி நகைக் கூந்தல் செம்முது செவிலியர்
பரி பெலின் ஞாழியப் பந்தர் ஓடி
ஏல் மறுக்கும் சிறு விளையாட்டி” (நற்றி, 110 -6)
எனும் இப்பாடலில் தோழியை எவ்வாறெல்லாம் செவிலித்தாய் வளர்த்தாள் எனும் குறிப்பு இல்லை. செவிலி தலைவியின் நலனில் அக்கறைக்கொண்ட அவனின் வாழ்வுக்காகவே வாழ்ந்த இயல்பினளாக விளங்குகின்றாள்.
செவிலியின் உயர்நிலைப் பண்புகள்
தலைவியின் களவினைத் தோழி கூறுவதற்கு முன்பு செவிலித்தாய் தமது பண்ணறிவினால் அறிந்துகொள்ளும் மனநிலை கொண்டவளாக இருப்பதனை அறியமுடிகிறது. மன்னர் இற்செறிப்பின் மூலம் செவிலி தமது குலப்பெருமையையும் குடிப்பெருமையையும் காப்பது கடமை.
உணர்வுமிக்கவளாகக் காணப்படுகிறாள். வெறியாட்டு பற்றிய செயல்களை காணும்போது தலைவி மீது கொண்டுள்ள பாச உணர்வு வெளிப்படுகிறது. தலைவி உடன்போக்குச் சென்ற பிறகு செவிலி நற்றாயிடம் அறத்தொடு நின்று தமரின் உடன்பாட்டுடன் நாடறிய நல்மணம் செய்விக்க விழைகின்றாள். இவற்றால் செவிலியின் மன உணர்வும் கடமையுணர்வும் பொறுப்புணர்வும் வெளிப்படுத்துவதனை அறியமுடிகிறது.
சங்க காலம் சமுதாயத்தில் பெண்ணின் உணர்வுகள் பெண்களால் மதிப்பளித்தும் போற்றியும் காக்கும் நிலையைச் சங்க அக இலக்கியங்களில் காணப்படும் பெண் பாத்திரங்களான நற்றாய், செவிலி, தலைவி, தோழி மூலம் அறியலாம். இன்றைக்கும் கிராமப்புறச் சமுதாயங்களின் ஒரு தாயின் குழந்தையை மற்றொரு தாய் பராமரித்தலும் பாலூட்டி வளர்த்தலும் போன்ற நிகழ்வுகளாகக் காணமுடிகிறது. இவற்றையெல்லாம் காணும்போது ஒரே மன உணர்வினை சார்ந்தவர்களால் மட்டுமே இவ்வாறு உள்ளத்து உணர்வுடன் செயல்பட முடியும் என்பதை கண்டு கொள்ளமுடிகிறது.
துணைநூற்பட்டியல்
- அகத்தியலிங்கம்.ச.முனைவர், சாகாவரம் பெற்ற சங்கப் பாடல்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், 53, புதுதெரு, சிதம்பரம் – 1. பதிப்பு – 2002.
- ஆறுமுகம்.அ. முனைவர், சங்க இலக்கியத்தில் குடும்பம் உடைமை அரசு, பாவேந்தர் பதிப்பகம், 4/79, திருமழப்பாடி, அரியலூர் – 51. பதிப்பு – 1994.
- சிவராசன்.து. முனைவர், சங்க இலக்கிய வாழ்வியல், சிவம் பதிப்பகம், 162. காந்திநகர், விருப்பாட்சிபுரம், வேலூர் – 02. பதிப்பு - சூலை 2000.
- திருவாசகம்.ச. பாட்டும் தொகையும் தமிழர் வாழ்வும், காசி பதிப்பகம், சன்னதி வீதி, மையிலம் அஞ்சல், திண்டிவனம் – 304. பதிப்பு – 2008.
வேதநாயகம்.க.வீ. முனைவர், வாழ்வியலும் வழிபாடும், சுந்தரவடிவு பதிப்பகம், கணக்கம்பாளையம், கோபி வட்டம், ஈரோடு மாவட்டம்.