ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சங்ககாலப்பாடல்கள் சுட்டும் மூத்தோர் வழிபாடு - அகநாநூறு மற்றும் புறநானூறு பாடல்கள் சுட்டும் நடுகல் வழிபாட்டு மரபினடியான ஆய்வு

முனைவர் திருமதி சுகன்யா அரவிந்தன் 13 Oct 2020 Read Full PDF

 

முனைவர் திருமதி சுகன்யா அரவிந்தன் {Ph.D (Carnatic Music), MPhil (Carnatic Music), MFA (Bharathanatyam), BFA (Carnatic music), BA (Sociology), PGD in Education.}

முதுநிலை விரிவுரையாளர்,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

இலங்கை

 

 

ஆய்வுச்சுருக்கம்.

தொல் தமிழர் வாழ்வில் மூத்தோர் வழிபாடாக நடுகற் பண்பாடு அமைந்திருக்கின்றது. சங்கப்பனுவல்களின் தொகுப்பு முறையில் காலத்தால் முற்பட்டவையாகிய அகநானூறு, புறநானூறு ஆகியவற்றிலே ‘பதுக்கை’ மற்றும் ‘நடுகல்’ பற்றிய குறிப்புக்கள் அதிகம் உள்ளன. நடுகற்கள் எவ்வாறு வீரவழிபாடாகவும் சடங்கு முறையாகவும் மாற்றம் பெற்றது என்பதை இனங்காண்பதே இவ்வாய்வின் நோக்கமாகும். பகுப்பாய்வு முறையியலை அடிப்படையாகக் கொண்டு சங்கப்பாடல்களின் வைப்பு முறைகளிலே இலக்கியங்களைப் பகுப்பாய்வு செய்து, அவற்றில் நடுகல் குறித்த பாடல்களைத் தனியே வகையீடு செய்து விவரண முறையியல் அடிப்படையில் இந்த ஆய்வு முன்வைக்கப்படுகின்றது. கடவுள் கோட்பாடுகள் உருவாவதற்கு முன்னரே தமக்கு முன்னர் வாழ்ந்து தம்குடிகளைக் காத்து மடிந்த வீரர்களை மூத்தோராகக் கொண்டு தலைமுறையாகத் தொடர்ந்த மரபே நடுகல் வழிபாடு என அறியமுடிகின்றது. இதுவே பிற்காலத்தில் வழிபாட்டுச் சடங்காகவும் கிராமியத் தெய்வமரபாகவும் மாற்றமுற்றதெனக் கருதமுடிகின்றது.

திறவுச்சொற்கள்:

நடுகல், பதுக்கை, தொல் தமிழர் வழிபாடு, சங்கப்பாடல்கள், நடுகல் வழிபாட்டுப்பாடல்கள்

அறிமுகம்

தமிழ்ப்பண்பாட்டின் வேர்களைச் சங்கப்பனுவல்களில் கண்டுகொள்ளலாம். எழுத்து வடிவிலான ஆதாரங்களாகிய அவை, தமிழ்த்தொல்குடிகளின் பண்பாட்டை அறிந்துகொள்ள உதவுகின்றன. சங்கப்பனுவல்களில் பலியிடுதல், வெறியாட்டு, நடுகல் ஆகிய தொன்மையான வழிபாட்டு முறைகள் பற்றியும் இவற்றுக்கூடாக மக்களின் பண்பாட்டையும் கண்டறிய முடிகின்றது. அகநானூறு மற்றும் புறநானூறுப்பாடல்களில் அதிகம் நடுகல் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. அப்;பாடல்கள் குறிக்கும் தொல்குடிப்பண்பாட்டை அறிவதன் மூலம் மூத்தோர் வழிபாடாக நடுகற்கள் அமைக்கப்பட்டன என்கின்ற உண்மையையும் கண்டடைய முடியும்.

சங்கப்பனுவல்களில் மூத்தோர் வழிபாடாக நடுகற்கள்

சங்க இலக்கியங்களில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, மலைபடுகடாம், பட்டினப்பாலை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகியவற்றில் முப்பதிற்கும் மேற்பட்ட பாடல்களில் நடுகல் வழிபாடு மற்றும் பதுக்கைகள் பற்றியகுறிப்புக்கள் காணப்படுகின்றன. இவற்றுள் அகநானூறு 16 பாடல்களும் புறநானூறு 12 பாடல்களும் அதிகமாக இந்த நடுகல் பற்றிப் பேசுகின்ற பாடல்களாகக் காணப்படுகின்றன. இவ்விரு இலக்கியங்களின் வழி நடுகல் வழிபாடுபற்றி நுண்மையாகத் தெரிந்துகொள்ளமுடிகின்றது.

நடுகல்

இது வீரன் இறந்த இடத்திலோ அல்லது வேறு இடத்திலோ அவனது நினைவாகக் பட்டப்படுவது. இது ‘வீரக்கல்’ எனவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த நடுகல்லானது வீரனின் நினைவுச் சின்னமாகத்திகழுகின்ற அதே வேளையில் அவனது புகழும் திறனும் அவன் மாண்ட சந்தர்ப்பம், பெயர் என்பனவும் அந்தக்கல்லிலே பொறிக்கப்படுவதும் வழக்கம். இந்தக்கல்லானது சிலஇடங்களிலே செப்பனிடப்படாத நினைவுக்கற்களாகவும் நாட்டப்படுகின்றன.

இது தவிர இறந்த வீரனின் உடல் கற்குவியல்களால் மூடி நினைவிடமாக அமைக்கின்ற மரபும் காணப்பட்டதாக இப்பனுவல்களின் மூலம் தெரிந்துகொள்ள முடிகின்றது. இது ‘பதுக்கைகள்’ என்று குறிப்பிடப்படுகின்றன.

கற்பதுக்கைகளுக்கருகில் நடுகற்கள் அமைக்கப்பட்டவற்றை ‘வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார் நடுகல் பீலி சூட்டி’(அகம் 35) என்ற பாடலில் கற்குவியல்களின் மேல் உள்ள நடுகற் தெய்வத்தை வழிபடுவதற்காக அக்கல்லில் மயிற்தோகைகளைச் சூட்டினார் எனவும் ‘உயர்பதுக்கு இவர்ந்த ததர்கொடி அதிரல் நெடுநிலை நடுகல் நாட்பலிக் கூட்டும்’ (அகம் 289) என்கின்ற பாடலிலே உடலை மூடிய உயர்ந்த கற்குவியல்களில் காட்டு மல்லிகை ஏற்றி, படரும் அம்மல்லிகையின் மலர்கள் கொண்டு நெடிது காலம் நிலைத்து நிற்கும் நடுகல்லாகிய தெய்வத்திற்கு நாட்பலியிட்டு வழிபாடு செய்வர் எனவும், ‘பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி’(புறம் 264) என்ற பாடலில் பரக்கைகளைக் கொண்டு மேடு அமைத்து மரலில் இருந்து எடுத்த நார்கொண்டு சிவந்த பூக்களால் கண்ணியைத்தொடுத்து அழகிய மயிற்பீலியை சூட்டி பெயரை எழுதி நடுகல்லும் நாட்டினர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, ‘வெறியாட்டுப்போன்ற பிறிதொரு சடங்காகக் கல்நாட்டி வழிபடும் நடுகல் சடங்கைக்கூறலாம். அகழாய்வுகள் மூலம் கண்டெடுக்கப்பட்ட ‘பதுக்கைகள்’ எனப்படும் கற்படைகள் தமிழகம் முழுவதும் மிகுதியாகக்கிடைத்துள்ளன. ஊரிருக்கைகள் அமைந்த பகுதிகளில் இவ்வகையான நடுகற்கள் மிகுதியாகக் கிடைத்துள்ளன. வீரனை நினைவுபடுத்தும் வகையில் கல் நாட்டப்பட்டு வழிபடப்பட்டவை இவை. அதனை நடுகல் என்று அழைக்கின்றோம்’(1) இவற்றினூடாகக் கற்பதுக்கைகள் அமைக்கப்பட்டு அருகில் நடுகல் நாட்டப்பட்டு வழிபாடியற்றப்பட்ட செய்திகள் பற்றி அறிந்துகொள்ளமுடிகின்றது.

நடுகல் காணப்படுகின்ற இடங்கள்

நடுகற்கள் பெரும்பாலும் ஊரின் எல்லையில் அல்லது ஊரின் ஒதுக்குப்புறத்திலே போர் நடைபெற்ற இடங்களில் அமைக்கப்படுவது வழக்கம். அகநானூற்று பாலைத்திணைப்பாடலிலே இவை குறித்து அதிகமான குறிப்புக்கள் காணப்படுகின்றன. ‘பெரிய ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும் நின்றாங்கு பெயரும் கானம்’(அகம் 387) என பெரிய முகபடாம் அணிந்த யானை மீது செல்லும் அரசியராயினும் அவ்விடத்தினின்றும் மேலும் செல்ல நினைக்காது திரும்பிச் செல்லும் அச்சம் மிகுந்த பாலை நிலம் எனவும், ஒருமுறை சென்றவர் மீளவும் செல்லத் தயங்கும் நீண்ட சுரவழியில் அந்நடுகற்கள் உள்ளன எனவும், போர் நடந்த பாலை நிலங்களில் வரிசையாக அமைக்கப்பட்ட நடுகற்களின் அருகில வாள்களும் கேடயங்களும் வைக்கப்பட்டன என்றும் பாலைத்திணைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

புறநானூற்றுப் பாடல்களில், போர் நடந்த இடங்கள், ஊரின் எல்லைப்புறங்களுடன் ஏரிக்கரைகளில் ஆற்றங்கரைகளில் காட்டுப்பகுதிகளில் அமைக்கப்பட்ட குறிப்புக்களும் உள்ளன.

நடுகற்கள் அமைத்துப் பாடப்பட்டோரும் நடுகற்களின் அமைப்பும்

அகநானூற்றுப் பாடல்களில் போரில் இறந்த வீரர்களுக்குப் பெயரும் பீடும் எழுதி வேல், கேடயம், வைக்கப்பட்ட நடுகற்களும் பின்னர் செம்மறிக்குட்டி பலியிடப்பட்ட செய்திகளும் பதிவாகியுள்ளன.

துழையிட்டு மூடிய கற்குவியல் (அகம் 109), கற்குவியல் (அகம் 289), வீரனின் நடுகல் (அகம் 387), காட்டு யானை ஆள் என உதைத்த நடுகல் (அகம் 365), மறவர் நடுகல்லில் அம்பு தீட்டுதல் தெனால் நடுகல்லின் எழுத்துப்பக்கம் தேய்ந்து காணப்படல் (அகம் 297), பெயரும் பீடும் எழுதிய நடுகல் (அகம் 179), பெயரும் பீடும் எழுதிய எழுத்துடை நடுகல் (அகம் 53), கற்குவியல் கொண்ட பதுக்கையும், நடுகல் முன் வேலும் கேடயமும் வைக்கப்பட்டவையும் ( அகம் 67), பெயரும் பீடும் எழுதி வேல், கேடயம்  வைக்கப்பட்ட நடுகல் (அகம் 131), நடுகல் தெய்வத்திற்கு மயில்தோகை, துடிமுழக்குதல், செம்மறிக்குட்டி பலியிட்ட செய்தி குறிப்பிடுதல் (அகம் 35), ஆகியன அகநானூற்றுச் செய்யுட்களின் வழி அறியப்படும் நடுகல் குறிப்புக்களாகும்.

மேற்குறித்த அகநானூற்றுப்பாடல்களில் கற்குவியல்களும் பதுக்கைகளும் பின்னர் பெயரும் பீடும் எழுதி வேல் கேடயம் வைக்கப்பட்ட நடுகற்களும் காணப்பட்டன. மற்றும் பலியிடப்பட்ட செய்திகளும் வகுக்கின்றது. இங்கு படிப்படியான வளர்ச்சியும் தெரிகின்றது. புறநானூற்றுப் பாடல்களில் அரசர்கள், நிலத்தலைவர்கள், போரில் இறந்த வீரர்கள் ஆகியோருக்கு நடுகற்கள் அமைத்து வழிபடப்பட்ட குறிப்புகள் உள்ளன. இவை புறநானூற்றுப்பாடல்களில் ஒரு சடங்குமுறைக்கு மாற்றம் பெறுவதை அவதானிக்கலாம். புறநானூற்றுப்பாடல்களில் கோப்பெருஞ்சோழன் மீது நட்புக்கொண்டிருந்த பொத்தியார் பாடிய (புறம் 221, 222, 223) பாடல்களினதும், அதியமான்நெடுமான் அஞ்சியை ஓளவையார் பாடிய (புறம் 232) பாடலிலும் நடுகல் வழிபாடு குறிக்கப்படுகின்றது. இவைதவிர ஏனைய புறநானூற்றுப்பாடல்களில் அதிகாரமும் நிரை மீட்கும் போரிலும் அரசனுடன் கூடவே பகை முடிக்கும் போரிலும் இறந்த வீரர்கள் மீதே அதிகமான பாடல்கள் பாடப்பட்டுள்ளன. ஆநிரை மீட்கவரும் போரில் மாண்டவன் நடுகல் (புறம் 260), பகைகவர்ந்த ஆநிரை மீட்டுத் தந்தபோரில் வீழ்ந்த கரந்தை மறவனின் நடுகல் (புறம் 262), நிரைமீட்டு உயிர்துறந்த வீரனுக்கு பீலியும் கண்ணியும் சூட்டிக்கல்நட்டமை (புறம் 264), நிரை மீட்டு உயிர் துறந்த வீரனின் கல்லிற்கு மாலைசூட்டுதல் (புறம் 265), கணவன் பகைமுடித்து வருக என முன்னோரின் நடுகல்லை பரவியமை (புறம் 306) போருக்குச்சென்ற கணவன் நடுகல் மிகுந்த ஊரை உடையவன் என ஊரின் சிறப்பைப் பாடுதல் (புறம் 314), பலியிட்டு நன்னீராட்டி நெய் விளக்கேற்றி நடுகல்லை வழிபடும் சிறப்பைப் பாடியமை (புறம் 329), களிறினை எறிந்து தாமும் வீழ்ந்த மலை நாட்டுத்தலைவனின் நடுகல்லைத் தொழுவோம் எனப்பாடியமை (புறம் 335) முதலான புறப்பாடல்களில் நடுகல் குறித்து உரைக்கப்பட்டுள்ளன.

மேற்குறித்த பாடல்களில் கல்நடுதல், நன்னீராட்டுதல், பீலி சூட்டுதல், பலியிடுதல், நெய்விளக்கேற்றுதல், மது படைத்தல், மாலை சூட்டுதல், வணங்குதல் ஆகிய வழிபாட்டு முறை எடுத்துக்காட்டப்படுதல் கவனிக்கத்தக்கது. நடுகல் அமைக்கும்போது இறந்தவர்கள் பாவித்தபொருட்களை இட்டுப்புதைத்தலை (புறம்329, புறம் 252, அகம் 35) இக்கால மக்கள் வழக்கமாகக்கொண்டிருந்தனர்.

தமிழக்கத்தில் நடுகற்களைப்பற்றி ஆராய்ந்த பேராசிரியர் வெ. கேசவராஜ் (2) அமைக்கப்பட்ட நடுகற்களை, நிரை மீட்டோர் கல், வடக்கிருந்தோர் கல், பத்தினிப்படிமக்கல், கடலுள் மாய்ந்ததோர் கல், ஊர்காத்தான் கல், பெண்மீட்டான் கல், அறம்காத்த நடுகல், கழிபேராண்மைக்கல், சாவாரப்பலிக்கல், அடியார் சமாதி, அரசர் பள்ளிப்படை, புலிகுத்திக்கல், பன்றி குத்திக்கல், குதிரை குத்திக்கல், எழுதுபொருதாகல், மாடு பொறித்த கல், யானைப்போர் நடுகல், நாய்க்கு நடுகல் ஆகியனவாக வகைப்படுத்தியுள்ளார். இவற்றுள் சங்ககாலப்பிற்பகுதியில் மீட்கப்பட்ட நடுகற்களும் கவனத்திற்கொள்ளப்பட்டன.

 

முன்னோரைப்போற்றுதல்

தொல் தமிழர் மரபில் நடுகற்கள் வீரக்கற்களாகப் போற்றப்பட்டிருக்கின்றன. போரில் மரணடைந்தவர்கள் தம் குடிகளைக்காக்க வந்தவர்களாகவும் அவர்கள் தம்மைக் காவல் செய்கிறார்கள் என்பதையும் மக்கள் நம்பினர். இதனாலேயே வழிவழியாக வந்த நம்பிக்கையின் அடிப்படையில் நடுகற்கள் பின்னர் வணக்கத்துக்குரியனவாகப் போற்றப்பட்டிருக்கின்றன. இவை தமக்கு முன்னோரைத் தெய்வமாகப் போற்றி வழிபடும் மரபை எமக்குக் காட்டுகின்றன.

‘ஒளிறு ஏந்து மருப்பின் கயிறு எறிந்து வீழ்ந்ததெனக்

கல்லே பரவின் அல்லது

நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே’(3)

என்ற மாங்குடி மருனாரின் புறநானூற்றுப் பாடல் களிற்றை வென்று தாமும் வீழ்ந்து நடுகல்லாயினவரின் நடுகல்லைத்தொழுவதன்றி நெல்லும் பூவும் சொரிந்து வழிபடச் சிறந்த கடவுளும் வேறு இல்லை என்று குறிப்பிடுகின்றது. இதனூடாகக் களிறு எறிந்து பட்டோருக்கு நடுகல்லமைத்து அவனையே தெய்வமாக வணங்கும் வீர வழிபாடு நடத்தப்பட்டிருக்கின்றது என்பது பற்றி அறிந்துகொள்ளமுடிகின்றது.

‘நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது

விருந்து எதிர் பெறுகதில் யானே’(4)

என்ற புறப்பாடல் களிறுகள் பொருது சிதைந்த முள்செடியாலாகிய வேலியும் மக்கள் அரிதாகவே வந்து உண்ணும் நீர்நிலையும் உடைய சிறிய ஊரிலே வாழ்ந்த மறக்குலப்பெண் தன் கணவன் பகைமுடித்து வருக என நடுகல்லை வேண்டுகின்றாள். இப்பாடலானது நடுகல்லை வழிபாடு செய்யும் ஒரு பெண்ணைக் கண்டோர் கூற்றாக அமைந்துள்ளது. ‘தமிழ்நாட்டுத்தொல் பொருளாய்வுக்துறை 300க்கும் மேற்பட்ட நடுகற்களை வடார்க்காடு, தர்மபுரி மாவட்டங்களில் கண்டுபிடித்துள்ளது. இவற்றில் பெரும்பாலான நடுகற்கள் இன்றும் வழிபாட்டில் உள்ளன. மக்கள் இந்நடுகற்களைக் கடவுளாகக்கருதி வழிபட்டுவருகின்றனர். இவற்றுக்கு ஆண்டுதோறும் சிறந்த வழிபாடுகளும் விழாக்களும் நடத்தப்பட்டுவருகின்றன. இவற்றின் முன்னர் இரும்பாலான சூலமும் கத்தியும் இன்றும் நட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றிற்கும் எண்ணெய் பூசி, மாலை அணிவித்து வழிபடுகின்றனர்’.(5)

தொடரும் வழிபாட்டு மரபு

அகநானூற்றுப்பாடல்களில் கற்குவியற் பதுக்கைகள் பற்றியும், நடுகற்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை ‘எழுத்துடை நடுகற்கள்’ என்ற செய்திகளும் கிடைக்கப்பெறுவதோடு அவற்றுக்கருகில் வேல், கேடகம் வைக்கப்பட்ட செய்திகளும் காணப்படுகின்றன. சில பாடல்களில் நடுகற்களின் முன் பலியிடப்பட்ட செய்திகளும் கிடைக்கின்றன. ஆனால் புறநானூற்றில் வழிபாடு இயற்றும் குறிப்புக்கள் மாத்திரமே அதிகமாக உள்ளன. இங்கு நடுகற்கள் ஒரு சடங்கு முறையாகவும் வழிபாட்டுக்கு உரியனவாகவும் மாற்றமடைவதை அவதானிக்கலாம்.

நடுகற்களை வணங்குவதால் மழைவளம் பெருகும், நாடு சிறப்புறும், பயிர்வளம் சிறக்கும், போருக்குச்சென்ற நிலத்தலைவர்களும் வீரர்களும் வெற்றிபெற்று மீள்வார்கள், மக்கள் பாதுகாக்கப்பட்டுச் சிறப்பெய்துவார்கள், நோய் முதலியவற்றிலிருந்து விடுபடுவார்கள் முதலான நம்பிக்கைகள் இவற்றினூடாக வெளிப்படுத்தப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாகவே இன்றும்  வேள்வி நடாத்தி மடை கொடுத்துச் சிறு தெய்வங்களை வழிபடுவது வழக்கத்திலுள்ளது. ஐயனார், மதுரை வீரன், இருளன், கறுப்பன், நொண்டி முதலியன நடுகல் தெய்வங்களை ஒத்தனவாயுள்ளன.’(6)என பேராசிரியர் சு.வித்தியாநந்தன் அவர்கள் நடுகல்வழிபாடு கிராமிய தெய்வ வழிபாடகள் மாறியமை குறித்து எழுதுகிறார். அதனாலேயே முன்னோரை வழிபடும் மரபாக நடுகற்கள் அமைந்துள்ளன என்ற முடிவுக்கு வரமுடிகின்றது.

‘வீரக்கற்களை நிறுவுவது என்பது அக்காலச் சமூகத்தின் இறப்புச் சடங்கோடு தொடர்புடைய நம்பிக்கைகள் பழக்கங்களின் ஒரு கூறாகும். இந்த பழக்கமும் இதனை ஒட்டிய நம்பிக்கையும் தென்னிந்தியாவில் கி.மு. முதலாயிரம் ஆண்டுகளின் பிற்பாதியில் நிலவிய இரும்புக்காலப் பெருங்கற் புதைவுப்பழக்கத்தின் ஒரு பகுதியாகும். இதன் இறுதிச்சடங்கு எச்சங்கள் நாடுமுழுவதும் காணப்படுகின்றன. மேலும் இந்தப்பழக்கத்தோடு இறந்த முன்னோரை வழிபடும் மரபும் முற்பட நிலவி, பின் இதனோடு கலந்திருந்ததாகக் கருதப்படுகின்றது.’(7) இறந்தவர்களின் நினைவும் அவர்களை நடுகற்களாக அமைத்து வழிபடுவதால் தமக்கு அவை ஆற்றலை வழங்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் இவற்றை வணங்கியிருக்கின்றனர்.

முடிவுரை

சங்கப்பனுவல்களில் அகநானூறு புறநானூறு ஆகியவற்றின் வழி நடுகற்பண்பாடு இருந்துள்ளது என்பதும் அவை நாடுகாக்கும் போரிலும் தம் குடிகளைக் காக்கும் ஏனைய வழிகளிலும் தம் முயிரைக் கொடுத்து மாண்ட வீரர்களை நினைக்கும் வகையில் அமைக்கப்பட்டவை என்பது எழுத்துக்களின் வழியிலான ஆதாரங்களின் ஊடாக அறியப்படுகின்றன. உயிர் நீத்த வீரர்களுக்கு கல்நட்டு வழிபாடு இயற்றும் வழக்கம் அதிகமாகத் தொல்குடிகளின் பண்பாட்டில் நிகழ்ந்துள்ளன. இது தொடர்ச்சியாக ஒரு சடங்காகப் பேணப்பட்டு வந்துள்ளது. மூத்தோரை வழிபடும் இந்நடுகற் பண்பாடே பிற்காலத்தில் நாட்டுப்புறத்தெய்வ வழிபாடாக நிலைபெற்று வளர்ந்திருக்கின்றது. இதனூடாக தமிழரின் வழிபாட்டு மரபு என்பது நடுகற்களின் வழியாகவே பேணப்பட்டு வந்துள்ளது என்பது சங்கப்பிரதிகளின் வழி தெளிவாகப்பதிவாகியுள்ளது. இவற்றை அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கு ஏதுவாக தமிழ்நாட்டில் தொல்பொருள் ஆய்வுகளின் ஊடாகக் கண்டுபிடிக்கப்பட்ட நடுகற்களும் அண்மைய கீழடி ஆய்வுகளிற் கிடைத்த பழந்தமிழரின் பாவனைப்பொருட்டிளும் மேலும் உறுதிப்படுத்துகின்றன. இவற்றின் வழி தமிழரின் வழிபாடு மரபின் வேர்களைக் கண்டடைய முடியும் என்று கருத இடமுண்டு.

அடிக்குறிப்புக்கள்:

1.         அரசு, வீ, (2009) சங்க நூல்களில் இடம்பெற்றிருக்கும் சடஙடகுகள் சார்ந்த தொகையாக்கம்,புதிய பனுவல், சர்வதோச தமிழியல் ஆய்வுகள் : இதழ் 3 பக் :6

2.            கேசவராஜ்,வே.,(2008), தென்னிந்திய நடுகற்கள், .காவ்யா,   சென்னை.

3.             புறநானூறு, 335:10-12

4.             மேலது, 306:: 4-5

5.         அர்த்தநாரீஸ்வரன். பெ.,(1996), கல்வெட்டுவழிப்பண்பாட்டியல் : கொங்குவேள் பதிப்பகம், சென்னை, ப : 8

6.         வித்தியானந்தன். சு. (1971),தமிழர் சால்பு, பாரி புத்தகப்பண்ணை, சென்னை, பக் :125

7.             அரசு. வீ., மேலது 1 : ப 6-7