இயேசு பிறப்புக் கதைப்பாடல்கள்
கட்டுரையாளர்:
தா.மதன், முனைவர் பட்ட ஆய்வாளர், ஸ்காட் கிறித்துவக் கல்லூரி(தன்னாட்சி), நாகர்கோயில்
நெறியாளர்:
முனைவர். டி.தேவசம்பத். இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்காட் கிறித்துவக் கல்லூரி(தன்னாட்சி), நாகர்கோயில்
ஆய்வு சுருக்கம்:
மனிதனாய் இவ்வுலகில் வாழ்ந்து மனுகுலத்தை மீட்டு எடுக்க அவதரித்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை இவ்வாய்வு கட்டுரை இயம்புகிறது. இவ்வாய்வு கட்டுரையானது இயேசு கிறிஸ்துவின் பிறப்பினையும் அதுமட்டுமல்லாமல் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய நிகழ்வினையும் எடுத்துரைக்கிறது. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி மகிழ்ந்தார். அதன்பின் பூமியிலே சகலகனி விருட்சங்களையும், ஆதாம் ஏவாளையும் படைத்தார். பின்னர் இருவரையும் ஏதேன் தோட்டத்தில் அமர்த்தினார். இறைவன் மனிதனிடம் இறைக் கட்டளையை மீறும் நாளில் சாகுவீர்கள் என்று கூறினார். ஆனால் மனிதனோ இறைகட்டளையை மீறி நடந்தான். எனவே பாவம் பூமியில் நுழைந்தது, ஆகையால் கடவுள் தனது மகனையே பூமிக்கு அனுப்பினார் என்பதையும், இறை மகன் பிறந்த செய்தியை தூதன் அறிவித்ததையும் மேய்ப்பர்கள், வானசாஸ்திரிகள் இறை மகனை வணங்கிய நிகழ்வினையும் இக்கட்டுரையானது இயம்புகிறது.
திறவுச் சொற்கள்;
இயேசு பிறப்புக் கதைப்பாடல்கள் ,மரியாள் தேவகுமாரனை ஈன்றெடுத்தல் ,இயேசுப் பிறப்பை வானதூதர் அறிவித்தல் ,இடையர்கள் கண்டு வணங்குதல் ,சாஸ்திரிகள் கண்டு வணங்குதல்
முன்னுரை:
ஆதியில் தேவன் வானத்தையும், பூமியையும் உண்டாக்கி மகிழ்ந்தார். அவர் பூமியிலே சகலவிருட்சங்களையும் படைத்து ஆதாம் ஏவாளையும் படைத்து அந்த நிலத்தை பண்படுத்தவும், பாதுகாக்கவும் வைத்தார். இறைவன் மனிதனிடம் இறைக் கட்டளையை மீறம் நாளில் சாகுவீர்கள் என்று கூறி ஏதேன் தோட்டத்தில் அமர்த்தினார். அதையும் மீறி மனிதன் தவறு செய்தான். எனவே மனிதனின் கீழ்பழயாமையால் பாவம் பூமயில் நுழைந்தது. எனவே மனிதனை மீட்க தன் மகனை பூமிக்கு அனுப்பினார் இறைவன். அவரது பிறப்பினை இவ்வாய்வுக் கட்டுரையில் காண்போம்.
இயேசு பிறப்புக் கதைப்பாடல்கள்:
தேவனால் அனுப்பட்ட காபிரியேல் என்னும் தூதன் கன்னிமரியாளிடத்தில் வந்து கூறிய செய்தியை இயேசு பிறப்புக் கதைப்பாடலானது,
“காபிரியேல் என்னும் தூதனை
கர்த்தர் அன்பாகவே அழைத்தார்
கன்னி மரியாளிடத்தில் நான்
சொல்வதை சொல்லெனறனுப்பி வைத்தார்
கிருபை பெற்றவளே நீ வாழ்க
கர்த்தர் உன்னுடனே இருக்கிறார்
என்று நீ சொல்ல வேண்டும் உன்னை
பெண்களில் உத்தமியாய் அறிந்தார்
மைந்தனாகப் பிறப்பார், உன்னை
மாதாவாய் கொண்டிடவே நினைத்தார்
என்று சொன்னதும் கன்னிமாரி
சிந்தை நொந்து கலங்கி நின்றார்” (கிறிஸ்தவக் கதைப்பாடல்கள்: ப:350)
தேவனால் அனுப்பட்ட காபிரியேல் என்னும் தூதன் கன்னி மரியாளிடத்தில் வந்து கூறியதை விவிலியமானது,
“ஸ்திரியே பெண்களில் நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக”. (பரிசுத்த வேதாகமம், லூக்கா:1:31) என்று காபிரியேல் தூதன் கன்னி மரியாளிடத்தில் கூறியதை விவிலியம் கூறுகின்றது.
காபிரியேல் தூதன் சொன்னதைக் கேட்டு கன்னிமரியாள் மனதில் கலங்கி கணவனை அறியாத எனக்கு குழந்தை பிறப்பது எப்படி சாத்தியமாகும் என்று தூதனிடம் கேட்டாள் என்பதை கதைப்பாடலானது.
“என்ன சொல்கிறாய்? – எதுவோ என்நேரிலே
இதை இறைவன் சொன்னார் என்கிறாய்
திடமரியன் முன்னிலே- (நீ என்ன)
கன்னிகையாகவே வாழ்கிறேன்
கதை பேசும் தூதனே
கணவனை அறியேன் பாரிலே
கருவாகும் நாளிலே” (கிறிஸ்தவக் கதைப்பாடல்கள்: பக்: 351, 352)
உடனே தூதன் இது தேவனின் வாக்குத்தத்தம். நீ கண்டிப்பாக ஒரு ஆண் குழந்தை பெறுவாய், அப்பொழுது ஆவியின் வல்லமையை பற்றி அறிந்து கொள்வாய் என கூறுகிறான். இதை கதைப்பாடலானது,
“தேவனின் கற்பனை தானம்மா
இதிலே சந்தேகமா
ஆவியின் வல்லமை பாரம்மா
ஆழகாக கேளம்மா
நீ என்ன சொல்கிறாய்
எதுவோ என் நேரிலே
இதை இறைவன் சொன்னார் என்கிறாய்
திட மரியன் முன்னிலே” (கிறிஸ்தவக் கதைப்பாடல்கள்: ப:352)
மரியாள் காபிரியேலை நோக்கி தூதனே கன்னியானவள் மகனைப் பெறுவது எப்படி முடியும் என்று கேட்கிறாள் தூதன் மரியாளை நோக்கி
“நோவின்றிக் கன்னியொரு மகனைப் பெறுவாளென்ற
நோன்மை பொய்யாமோ என் செல்வனே” (கிறிஸ்தவத் தமிழ்
நாடகங்கள்: ப:64)
என தூதன் கூறுகிறான்.
தூதன் மரியாளிடத்தில் மலடியாய் இருந்த சகரியாவின் மனைவி எலிசபெத் தேவாவியினால் வயோதிக பருவத்தில் கற்பமடைகிறாள். இதுவே உனக்கு அடையாளமாயிருக்கும். நீ கண்டிப்பாக ஒரு பிள்ளையை ஈன்றெடுப்பாய் அவனுக்கு ‘இயேசு’ என்று பேரிடுவாயாக! என்று கூறிக் கொண்டு மறைந்தான்.
எலிசபெத் இல்லத்தில் மரியாளும் சூசையப்பரும்:
காபிரியேல் தூதன் சொன்னப்படி எலிசபெத் கருவுற்றிருக்கிறளா என்பதை அறிய விரும்பி மரியாள் எலிசபெத்தை காணச் செல்ல வேண்டும் என்று சூசையப்பரிடம் கேட்டவுடன் அவர் அனுமதி அளித்தும் இருவரும் எலிசபெத்தின் இல்லத்தில் வந்தடைக்கிறார்கள். மரியாளைக் கண்ட எலிசபெத் மரியாளின் மகத்துவத்தை அறிந்து அவளை வணங்கி அழைத்துச் செல்கிறாள். மரியாளும் சூசையப்பரும் எலிசபெத் இல்லத்தில் மூன்று மாதம் தங்கியிருந்தனர். கருவுற்றிருந்த எலிசபெத் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள்.
“எலிசபெத்துக்குப் பிரசவ காலம் நிறைவேறின் போது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள்” (பரிசுத்த வேதாகமம்., லூக்கா: 1:57)
காபிரியேல் தூதன் கூறியதை கேட்ட மரியாள் சகரியாவின் வீட்டிற்க்கு சென்றதை கதைப்பாடலானது.
“அம்மா……. சுகரியாவின் வீடு தேடி போனாள் தேவ சத்தியத்தை தானறியலானாள்” (கிறிஸ்தவக் கதைப்பாடல்கள்: ப: 352)
மரியாளின் மீது சூசை கொண்ட சந்தேகம்:
எலிசபெத்திடமிருந்து விடைபெற்றுக் கொண்டு மரியாளும் சூசையும் நசரை மாநகர் வந்து சேருகின்றனர். மரியாளின் முகம் மாறியிருப்பதைக் கண்ட சூசை சந்தேகப்பட்டு
“ஒப்பில் அற்புதக் கற்பு மாது-கர்ப்பம்
உண்டாயிருக்கும் விதமேது” (கிறிஸ்தவக் தமிழ் நாடகங்கள்: ப:65)
எனறு கேட்கிறார்.
சூசை மரியாள் மீது சந்தேகம் அடைந்ததை விவிலியமானது,
“அவள் புருஷனகிய யோசேப்பு நீதிமானயிருந்து அவளை அவமானப்படுத்த மனதில்லாமல் இரகசியமாய் அவளைத் தள்ளிடவிட யோசனையாயிருந்தான்” (பரிசுத்த வேதாகமம், மத்தேயு: 1:19) என விவிலியம் கூறுகிறது,
சூசை சந்தேகப்படுவதை அறிந்த மரியாள் அவரை அணுகி,
“சிந்தை மிகவும் நொந்து வருந்துந்துயரே தையா
தெளிவுறச் சொல்லுவாய் மெய்யா” (கிறிஸ்;தவத் தமிழ் நாடகங்கள்: ப:65)
என்று சூசையிடம் கேட்கிறாள் மரியாள்.
மரியாள் சூசையிடம் கேட்டதை கதைப்பாடலானது,
“கர்ப்பவதியாயிருக்கும் கன்னியைப் பார்த்து- அன்று
கணவனாக நிச்சயித்திருந்த யோசேப்பு
தப்பிதமாய் எண்ணுவானென்றாண்டவன் பார்த்து” (கிறிஸ்தவக்
கதைப்பாடல்கள்: ப:352)
மரியாளின் மீது சூசை கொண்ட சந்தேகம் நீங்குதல்:
சூசை மரியாளை விட்டுப் பிரிந்து போக மனம் கொண்டதை அறிந்த மரியாள் ஆண்டவரிடம் முறையிட்டு வேண்டுகிறான். ஆண்டவர் காபிரியேலைச் சூசையிடம் அனுப்பி உண்மையினைக் கூறும்படி கூற உடனே காபிரியேல் சூசையின் கனவில் தோன்றி உண்மையை கூறுகிறார். உண்மையை உணர்ந்த சூசை ஆண்டவரின் அருளால் சந்தேகம் நீங்கி மரியாளின் பரிசுத்த கன்னிமையை வணங்கியதை,
“ஏதுனக்கினி யீடு நினைப் போலே
எவர்பெற்றர் மேம் பாடு” (கிறிஸ்தவக் தமிழ் நாடகங்கள்: ப:66)
என்று கூறி மரியாளைப் புகழ்கிறார்.
மரியாளை சூசை சேர்த்துக் கொண்டதை
“அவனை சேர்த்து விட்டார் கன்னியிடம் சந்தேகம் தீர்த்து” – (அம்மா).
(கிறிஸ்தவக் கதைப்பாடல்கள்: ப:352) என கதைப்பாடல் கூறுகிறது.
சூசை மரியாளை சேர்த்து கொண்டதை விவிலியமானது,
“யோசேப்பு நித்திர தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக் கொண்டு” (பரிசுத்த வேதாகமம், மத்தேயு: 1:24) என விவிலியம் கூறுகிறது.
மரியாள் தேவகுமாரனை ஈன்றெடுத்தல்:
குடிமதிப்பு எழுதப்பட வேண்டும் என்று அகஸ்துராயானால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. எனவே கன்னி மரியாளும், யோசேப்பும் கலிலேயா நாட்டிலிருந்து யூதேயா நாட்டுக்குப் சென்றனர். என்பதை கதைப்பாடலானது,
“கால்நடையாய் நடந்தார் இருபேருமாய்
கானகமும் பலமலை கடந்து
மாலைதனில் கதிரோன் மறைந்தானையா
மாமரியாள் உடல்களைப் படைய
பெத்லகேம் உளர்தனை பார்த்தவள் போகவே” (கிறிஸ்தவக்
கதைப்பாடல்கள்: ப:353)
கன்னி மரியாளும், யோசேப்பும் யூதேயா நாட்டிற்கு சென்றதை விவிலியமானது,
“கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்” (பரிசுத்த வேதாகமம், மத்தேயு 2:5) என விவிலியம் கூறுகிறது.
யோசேப்பும் கன்னி மரியாளும் பெத்லகேம் என்ற ஊரில் இருக்கும் போது பிரசவவலி ஏற்பட்டு ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாள். என்பதை விவிலியம்
“அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது” (பரிசுத்த வேதாகமம், மத்தேயு 2:6)
“அவள் தன் முதற்பேறன குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்த படியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்” (பரிசுத்த வேதாகமம், மத்தேயு 2:7) என இயேசுவின் பிறப்பைக் விவிலியம் கூறுகிறது.
இறை மைந்தனின் பிறப்பைக் கதைப் பாடலானது,
“சத்திரமோ ஒரு சாவடியோ இல்லை
தங்கினர் அங்கொரு தொழுவதிலே
பாதிரவானதோர் வேளையில் இயேசு
பாரினிலே வந்து அவதரித்தார்
ஜோதிசுடர் ஒளி வானத்தில் வீசிட
தோன்றினார் பாலகன் உலகினிலே” (கிறிஸ்தவக் கதைப்பாடல்கள்:ப:353)
என இயேசுவின் பிறப்பைக் கதைப்பாடல் கூறுகின்றது.
இறை மைந்தனின் பிறப்பைக் விவிலியமானது “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.” (பரிசுத்த வேதாகமம், லூக்கா 2:11)
“பிள்ளையைத் துணிகளில் சுற்றி முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்டீர்கள், இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்” (பரிசுத்த வேதாகமம், லூக்கா 2:12) என விவிலியம் கூறுகிறது.
இயேசுப் பிறப்பை வானதூதர் அறிவித்தல்:
இறை மைந்தன் பிறந்த நிகழ்வை வானதூதர்கள் அறிவிக்கிறதை கதைப்பாடலானது,
“வானதூதர்கள் வந்து – வேதஸங்கீதம் பாடா
விந்தையுடனே வானில் வெள்ளியொன்று துலங்க
விண்ணவர் மனுவாக – வந்தாரறி வீரந்தோ
பூமேலே – நானே – புனிதா உன்னாலே தானே
உயர்ந்தேன் - மகிழ்ந்தேன்” (கிறிஸ்தவக் கதைப்பாடல்கள்: ப:270)
இறை மைந்தன் பிறப்பை தூதன் அறிவிக்கிறதை
“உன்னதத்தில் கடவுளுக்கு மகிமை
பூமியில் மனிதருக்குள் சமாதானம்
அவர்கள் மேல் கடவுளுக்குப் பிரியம்”
(இயேசு கிறிஸ்து நாதர் சரித்திர சங்கிரகம்:ப:8) என்று கூறுகிறது.
இடையர்கள் கண்டு வணங்குதல்:
பெத்லகேமில் மரியாளின் வயிற்றிலிருந்து தெய்வத் திருகுழந்தை பிறந்தவுடன் தெய்வதூதன் ஒருவன் இடையர்களை நோக்கி,
“மந்தைக் காக்கும் இடையரே! நீங்கள் அஞ்ச வேண்டாம். இதோ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. உலக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஒரு நற்செய்தி, உங்களுக்காக, உங்களுக்கு நல்வாழ்வளிப்பதற்காக. இன்று கடவுளாகிய கிறிஸ்து என்னும் மீட்பர் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறர். பிள்ளையைத் துணிகளில் சுற்றி மாட்டுத் தொழுவின் புல்லணையிNலு கிடத்தியிருக்கக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளாம்.” (கிறிஸ்தவத் தமிழ் நாடகங்கள்: பக்:97, 98) என்று கூறுகிறான்.
ஆட்டு மந்தையைக் காக்கின்ற மேய்ப்பர்கள் இறை மைந்தன் பிறந்த செய்தியை அறிந்து பார்க்க வந்ததை கதைப்பாடலானது,
“மேய்ப்பர்கள் வந்தார்கள்
பார்த்தவர் நின்றார்கள்
ஆர்பாட்டம் செய்தாரையா” (கிறிஸ்தவக் கதைப்பாடல்கள்:ப:50)
என இயேசு பிறப்புக் கதைப்பாடல் கூறுகிறது.
மேய்ப்பர்கள் இறைமகனை சந்தித்த நிகழ்வினை,
“பொன்னாளி மாலைப் புகழும் பணிந்து
மின்னலின் பிழம்பாய் மேனி வடித்துத்
கண்ணால் கண்டு களித்தனர் ஆயரே” (தேம்பாவணி ப:24)
சாஸ்திரிகள் கண்டு வணங்குதல்:
வான சாஸ்திரிகள் இறைமகனாகிய இயேசுவை வணங்கும் நிகழ்ச்சியை கதைப் பாடலானது,
“வான சாஸ்திரியானோரும், வான் கண்ட சுடர் பார்த்து
வழியாக வந்தாரையா
ஒரு கர்த்தாதி கர்த்தனென்று அவர் சொல்ல
கந்த வர்க்கங்கள் தனை தாங்கி நடைகொள்ள” (கிறிஸ்தவக்
கதைப்பாடல்கள்:பக்:353)
மரியாளையும் யோசேப்புயையும் நோக்கி, “நாங்கள் மூவரும் கிழக்கிலிருந்து வருகிறோம். நாங்கள் வான்சாஸ்திரிகள், கிழக்கிலே அந்த நட்சத்திரம் உதிக்கக் கண்டோம். அது நகர்ந்து கொண்டே வந்தது. நாங்களும் மாதக்கணக்காக அதைத் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தோம். அது ஒரு மாபெரும் அரசனின் நட்சத்திரம் அவர் பிறந்திருக்கிற செய்தியைச் சொல்லும் நட்சத்திரம். அது உங்கள் வீட்டிற்கு மேல் வந்து நின்றுவிட்டது. அது உங்கள் குழந்தையைத் தரிசிக்க வேண்டும். அவருக்கு எங்கள் காணிக்கைகளைச் செலுத்திவிட்டுச் செல்ல வேண்டும்” (கிறிஸ்தவத் தமிழ் நாடகங்கள்:ப:97) என கூறுகிறது.
வான சாஸ்திரிகள் இறை மகனை வணங்கும் நிகழ்வினை விவிலியமானது,
“அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து பிள்ளையும் அதின் தாயாகிய, மரியாளையும் கண்டு சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்து கொண்டு தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து பொன்னையும், தூபவர்க்கத்தையும், வெள்ளைப் போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். (பரிசுத்த வேதாகமம், மத்தேயு 2:11 என விவிலியம் கூறுகிறது.
முடிவுரை:
மனிதனின் பாவங்களை மீட்க மனிதனாக உருவெடுத்து, இறை மைந்தனின் பிறப்பினை அறிந்த மரியாளின் கலக்கத்தையும், பிறந்த இறை மைந்தனை கையில் ஏந்திய தாயின் மகிழ்ச்சியையும், பிறப்பு பற்றிய தூதனின் நற்செய்தியையும், இயேசுப் பிறப்புக் கதைப்பாடலானது மிகச்சிறப்பாக தெளிவுப்படுத்துகிறது. அதோடு மைந்தனின் பிறப்பை வானதூதர்கள் அறிவித்ததையும், இதன் மூலமாக இடையர்கள் வந்து இறைமகனை தொழுது நல்லாசி பெற்றதையும், வானசாஸ்திரிகள் இறைமகனை சந்தித்த செய்திகளை மிகச் சிறப்பாக இயேசுப்பிறப்புப் கதைப்பாடல் வெளிப்படுத்துகின்றது.
துணை நூற்பட்டியல்
1. ஜி. ஐசக் அருள்தாஸ்
கிறிஸ்தவக் கதைப்பாடல்கள்
அறிவுப் பதிப்பகம்
142, ஜானி ஜான்கான ரோடு
ராயப்பேட்டை சென்னை – 600014
2. பரிசுத்த வேதாகமம்
206 மகாத்மா காந்தி ரோடு
பெங்களுர் 560001
3. வீரமா முனிவர்
தேம்பாவனி
வீரமாமுனிவர் ஆய்வுக் கழகம்
தூய சவேரியார் கல்லூரி
பாளையங்கோட்டை
4. இயேசு கிறிஸ்து நாதர் சரித்திர சங்கிரகம்
லண்டன் மிஷன் பிறஸ்,
நாகர்கோவில் 1930
5. டாக்டர் பெ.கோவிந்தசாமி
கிறிஸ்தவத் தமிழ் நாடகங்கள்
கிறிஸ்தவ இலக்கிய சங்கம்
முதற்பதிப்பு: ஜீலை, 1992