ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

குறுந்தொகையில் விலங்கினச் சூழல் (Fauna In Kurundogai)

முனைவர் அர. கண்ணன், உதவிப்பேராசிரியர், இரத்னவேல் சுப்ரமணியம் கலை அறிவியல் கல்லூரி, சூலூர், கோவை – 641402 (Dr. R. Kannan, Assistant Professor, Ratnavel Subramaniam College of Arts and Sciences, Sulur, Coimbatore - 641402) 27 Jul 2023 Read Full PDF

குறுந்தொகையில் விலங்கினச் சூழல் (Fauna In Kurundogai)

முனைவர் அர. கண்ணன், உதவிப்பேராசிரியர், இரத்னவேல் சுப்ரமணியம் கலை அறிவியல் கல்லூரி, சூலூர், கோவை – 641402

Dr. R. Kannan, Assistant Professor, Ratnavel Subramaniam College of Arts and Sciences, Sulur, Coimbatore - 641402

ஆய்வுச் சுருக்கம்

உலகில் தோன்றிய உயிரின வகைப்பாட்டில் மிகவும் அரிதாக இருப்பன விலங்குகள். விலங்குகள் மிக நுண்ணிய உடலமைப்பையும், பருத்த உடலமைப்பையும் கொண்டவை. இவை ஊர்வன, நிற்பன, நடப்பன, பறப்பன, நீந்துவன என பல தகவமைப்புகளை உள்ளடக்கியவை. மக்களுடைய வாழ்க்கையில் விலங்குகள் இன்றியமையா இடத்தைப் பெறுகின்றன. விலங்குகள் தமிழர்தம் மன வெளியிலும், புறவெளியிலும், வாழ்நெறியிலும் உறவு கொண்டவை எனச் சங்க இலக்கியங்கள் எடுத்துரைத்துள்ளன. பழந்தமிழர் தன்னோடு இயைந்து வாழ்ந்த விலங்கினங்களை வேட்டையாடி அதனை உண்டு வந்தனர்;. காட்டுயிரிகளுள் ஒன்றாகிய விலங்குகள் சுற்றுச்சூழல் மண்டலத்தின் மிக அவசியமான உயிரினங்களாகும். காட்டில் உள்ள செடிகள், கொடிகள், மரங்கள் ஆகியவற்றை நல்ல நிலையில் பாதுகாக்க வன உயிரினங்களின் செயல்பாடுகள் முக்கியமானவையாகின்றன. இவ்வகையில் காட்டு விலங்குகளின் வாழிடச் சூழலும், உணவுச் சூழலும், பாதுகாப்புச் சூழலும் குறுந்தொகையில் அழகுறப் பாடப்பட்டுள்ளன. குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள இயங்குயிர்களின் நிலையையும் அவற்றின் சிறப்புக்களையும் எடுத்துரைப்பதாக இவ்வாய்வுக்; கட்டுரை அமைகிறது.

Abstract

Animals are one of the rarest species in the world. Animals have a very fine physique and a bulky physique. These include many adaptations like reptiles, standing, walking, flying and swimming. Animals occupy an essential place in people's lives. Sangha literature has highlighted that animals are related in tamil meaning mental space, outer space and lifestyle. Palandamizhar hunted animals that lived in harmony with him and ate them. Wild animals are the most essential creatures of the ecosystem. The activities of forest animals become important to preserve the plants, vines and trees in the forest in good condition. In this way the living environment, food environment and protection environment of wild animals have been beautifully sung in short.

This review highlights the status of the symbioses and their specialities that have been placed in the small volume; the article is set up.

திறவுச்சொற்கள்

விலங்கினங்கள், மரபுப்பெயர்கள், புலனுணர்வு அடிப்படையிலான வகைப்பாடு, குறுந்தொகையில் விலங்கின வகைப்பாடு, குறுந்தொகையில் நிலவாழ் விலங்குகள், நிலச் சூழலியலைப் பொருத்து இயங்குயிர் வேறுபடல், கூட்டமாக வாழுதல், குட்டிகளிடம் அன்பு காட்டும் இயங்குயிர்கள், வாழ்விடச் சூழலியல விலங்குயிர்களின் வாழ்வியலும் சூழலும், நீர் விலங்குகள்.

Keywords

Fauna, etymology, perceptual classification, classification of fauna in brief, terrestrial animals in brief, differentiation of symbionts according to terrestrial ecology, gregarious living, symbionts that love their young, habitat ecology, biology and ecology of fauna, aquatic animals.

விலங்கினங்கள்

      உலகில் பல்வேறுவகைப்பட்ட உயிரினங்கள் வாழ்கின்றன. அனைத்து விலங்குகளும் தாம் வாழும் சூழல் மண்டலத்தில் தத்தமக்குரிய பணியை ஆற்றுகின்றன. சூழல்மண்டலத்தில் காணப்படும் ஒவ்வொரு விலங்கினமும் வேறுபாடற்ற சமமதிப்புடையதாக அமைகின்றது. ஒர் குறிப்பிட்ட விலங்கின் அழிவு அதன் சூழலைப் பாதிப்பதாக அமையும். விலங்குகள் தங்கள் உணவுத் தேவைக்காகத் தாவரங்களையும், தம்மைப்போன்ற பிற விலங்குகளையும் சார்ந்தள்ளன. தமது உணவின் அடிப்படையில் தாவர உண்ணி, ஊன் உண்ணி, அனைத்துண்ணி என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

      விலங்கு எனப்படுபவை இடம் பெயரக்கூடியவை: தாமே உணவு தயாரிக்க முடியாதவை: வளர்ச்சி வரம்புடையவை”1

எனும் மூர்த்தி அவர்களது கருத்து விலங்கினத்தின் தன்மையை விளக்கும்.

அஃறிணை உயிரினங்களில் ‘விலங்கு’ முதன்மைப் பெற்று விளங்குகின்றது. விலங்கு என்பதற்குக் கலைக்களஞ்சியம்

“நாற்கால் பிராணிகளாகிய மயிர்ப் போர்வையுள்ள பாலூட்டிகள், இறகுப் போர்வையுள்ள பறவைகள், செதிர்ப் போர்வையுள்ள ஊர்வன, நீர்நில வாழும் தவளைகள் ஆகியவற்றை மட்டும் குறிக்கவில்லை. மீன்கள், பூச்சிகள், தேள், புழு, நத்தை, ஓரணுப் பிராணிகள் ஆகிய எல்லாவற்றையும் குறிக்கின்றது. ஆனால் இக்காலத்தில் விலங்கியலானது மிகப் பரந்ததோர் அறிவுத் துறையாக வளர்ந்து விட்டது. இதனால் இது உயிரியலின் ஒரு துறை என்றில்லாமல் இதில் பல பிரிவுகளே தனித்துறைகளாக ஆகிவிட்டன. உதாரணமாகப் பூச்சிகளைப் பற்றிய ஆராய்ச்சி பூச்சியியல் (Entomology) என்றும், ஓரணுப் பிராணிகளைப் பற்றிய பிரிவு புரோட்டோசோவாவியல் (Protozoology) என்றும், பாலூட்டிகளைப் பற்றியது பாலூட்டியியல் (Manalogy)) என்றும், பறவைகளைப் பற்றியது (Orinthology) என்றும், ஊர்வனவற்றைப் பற்றியது மினியல் (Ichthyology) என்றும் பல பிரிவுகளாக வளர்ந்துள்ளது”2  என்று விளக்கம் தருகின்றது.         (கலைக்களஞ்சியம்.ப-363)

      எனவே இங்கு விலங்குகள் என்பது குட்டி போட்டுப் பாலூட்டி வளர்ப்பனவற்றைப் பற்றியது என்பது புலனாகும்.

      மனித இனமும், தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம், குறிப்பாகக் குட்டி போட்டுப் பால் தரும் இனம்”                                     க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி, ப. 455

எனக் கிரியாவின் தற்காலத் தமிழகராதியும் விலங்கு குறித்து விளக்குகின்றது..

மரபுப்பெயர்கள்

      தொல்காப்பியர் அவர் காலத்திற்கு முன்பும், அவர் காலத்தினும் வாழ்ந்த விலங்குகளின் பெயர்களையும் இளமைப் பெயர்கள், ஆண்பாற் பெயர்கள், பெண்பாற் பெயர்கள் என மரபியலில் பட்டியலிட்டுக் காட்டுகின்றார்.

இளமைப்பெயர்கள்   : பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு,

                   மறி, குழவி என்ற ஒன்பதும் இளமைப்பெயர்கள்.

ஆண்பாற்பெயர்கள்   : ஏறு, ஏற்றை, ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை,

                   கலை, மோத்தை, தகர், உதள், அப்பர். மோத்து, கண்டி,               

                   கடுவன் போன்றன ஆண்பாற்பெயர்கள்.

பெண்பாற்பெயர்கள் : பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு, கடமை,

                   அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி என்ற

                   பதின்மூன்று பெண்பாற் மரபுப்பெயர்கள்.

      இதன்மூலம் தொல்காப்பியர் காலத்தில் விலங்குகள் ஆண், பெண் என்று பிரிக்கப்படடுள்ளன என்பதையும், விலங்குகளுக்கு இளமைப்பெயர்கள் சுட்டப்பெற்றிருந்தன என்பதையும் அறிய முடிகிறது.

குறுந்தொகையில் விலங்கின வகைப்பாடு

      குறுந்தொகையில் இருபத்தெட்டு விலங்குகளின் பெயர்கள் சுட்டப்பட்டுள்ளன. அணில், ஆடு, ஆமான், ஆமை, எருமை, எலி, எறும்பு, ஓந்தி, கடமா, குதிரை, குரங்கு, செந்நாய், தவளை, நண்டு, நாய், நீர்நாய், பசு, ஆனேறு, பல்லி, பாம்பு, புலி, மறையினம், மான், மீன், முதலை, யானை, வருடை, வரையா, வெருகு என்பன  ஆகும்.

      பறவையினங்களாக அன்றில் - அன்னம், எழால், கணந்துள், காக்கை, கிளி, குடமுள், குருவி, குறும்பூழ், கூகை, கொக்கு, கோழி, நாரை, நுளம்பு, பருந்து, புறா, அன்றில், மயில், யானை, குருகு, வங்கா, வண்டு, வெளவால் என்னும் 22 பறவைகள் சுட்டப்பட்டுள்ளன. இக்கட்டுரையில் விலங்கினங்கள் குறித்த பதிவுகள் மட்டுமே சுட்டப்பெறுகின்றன.

இயங்குயிர்களை ஈரறிவு முதலாக ஆறறிவு வரை தொல்காப்பியர் இனம் பிரித்துக் காட்டியுள்ளார்,

நந்தும் முரளும் ஈரறி வினவே

 பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

சிதலும் எறும்பும் மூவறி வினவே

 பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே

 பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

மாவும் புள்ளும் ஐயறி வினவே

 பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

தொல்.பொரு.மரபியல். நூ.28 -32.

குறுந்தொகையில் நிலவாழ் விலங்குகள்

      குறுந்தொகையில் நிலவாழ் விலங்குகள் திணை அடிப்படையில் அவ்வவ் நிலத்திற்கே உரியவையாகச் சுட்டப்பட்டுள்ளன. புலவர்கள் தங்கள் பாடல்களில் விலங்கினங்களைச் சூழலியல் சார்ந்து பாடியுள்ளனர். விலங்கினங்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழும் தகவமைப்பையும், மக்களுடன் ஒன்றிவாழும் தன்மையுடையன என்றும் வகைப்படுத்தியுள்ளனர்.

அணில்

      குறுந்தொகையில் சிற்றுயிரி என்னும் வகையில் அணில் முதன்மை பெறுகிறது. அணில் குட்டி போட்டுப் பாலூட்டும் சிறிய விலங்காகும். இது ஊர்வன வகையில் சார்ந்தது. அணில் ஆடுகின்ற பழமையான இல்லத்தைக் குறுந்தொகை சுட்டியுள்ளது. மேலும் இக்கருத்தை உணர்த்தக்கூடிய வகையில் ‘அணிலாடு முன்றிலார்’ எனும் பெயரில் சங்கப்புலவர் ஒருவர் வாழ்ந்;துள்ளமையும் இங்குச் சுட்டத்தக்கதாகும்.

      பாலை நிலத்தில் அமைந்த சிறுகுடியாகிய ஊரில் அணில் விளையாடுகின்ற தனித்த வீட்டின் முன்றில் காட்சிப்படுத்தப்படுகின்றது. இது மக்கள் வாழிடங்களை ஒட்டி வாழ்கின்ற, தற்காலத்தில் காணப்படும் மூன்று வரியுடைய அணிலைக் குறிப்பதைக் காணலாம். அணிலின் கூரிய பல்லானது முண்டகச் செடியின் முள்ளிற்கு உவமையாக்கப்பட்டுள்ளது. 

 அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்

 மக்கள் போகிய அணிலாடு முன்றில்.”   குறுந்.பா-41

அணிற்பல்லன்ன கொங்குமுதிர் முண்டகத்துகுறுந்.பா-49

என்னும் பாடலடிகள் அணில் விளையாடுகின்ற முற்றத்தையுடைய இல்லங்கள் இரந்தன என்பதை உணர்;த்துகின்றன.

ஆமான்;

ஆமா என்பது காட்டில் வாழும் பசு வகையைச் சார்ந்த விலங்காகும். சங்கப் பாடல்களில்,

தடங்கோட் டாமான் மடங்கல்   மாநிரை”   (நற்.பா-57(1))

           “ஆமா நல்லேறு சிலைப்பச் சேணின்று”   (முருகு.பா-315)

என்ற பாடலடிகள் ஆமான், வரையா, ஆமா என்ற சொற்கள்  கானத்துப் பசுவாகிய ஆமாவைக் குறித்துப் பயின்று வந்துள்ளன.

      இனிய துணையைப் பிரிந்த கண்ணியைச் சுற்றிய தலைமையுடைய மலை எருது, அறுகினது நீண்ட கொத்தைக் கடித்துத் தின்னும் மலைப் பசுவைப் பார்த்து பெருமூச்சு விட்டு உகாஅய் மரத்தின் நிழலில் தங்கும் இயல்புடையது என்பதை,

            கண்ணி மருப்பின் அண்ணல் நல்ஏறு

            செங்காற் பதவின் வார்குரல் கறிக்கும்

            மடக்காண் மரையா நோக்கி வெய்துற;று”   (குறுந்.பா-363)

என்னும் பாடலடிகள் எடுத்துரைக்கின்றன.

எருமை

      சங்ககாலத்தில் எருமை ‘காரான்’ என வழங்கப்பட்டது. சங்க இலக்கியத்தில் காட்டெருமை, வீட்டெருமை ஆகிய இரண்டையும் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

      எருமைகள் நீர் நிறைந்த பகுதியான மருத நிலத்தில் வளர்வது. மருத நிலத்தில் குளிர்ந்த நீரில் ஆடுகின்ற எருமை கட்டப்பட்ட தோனி போலத் தோன்றியது. முருக்கிய கொம்பையும், கருத்த நிறத்தையுமுடைய எருமையின் கழுத்தில், பிரிந்த வாயையுடைய மணி கட்டப்பட்டிருக்கும். அது நடுஇரவில் நடந்து வரும்போது ஒலியை எழுப்பும் என்று தலைவி ஆற்றாமையின் காரணத்தைத் தோழியிடம் எடுத்துரைக்கின்றாள். இதனை,

திரிமருப்பு எருமை இருள் நிற மைஆன்

 வருமிடறு யாத்த பகுவாய்த் தெண்மணி

 புலம்புகொள் யாமத்து இயங்குதொறூஉம் இகைக்கும்”  

(குறுந்.பா-279)

என்னும் பாடலடிகள் காட்டுகின்றன.

எலிகள்

      குட்டி போட்டுப் பாலூட்டும் விலங்குகளில் எலியும் ஒன்று. தொல்காப்பியத்தில் ‘எலி’ என்ற சொல் இடம்பெற்றிருந்தாலும் சங்க இலக்கியத்தில்தான் இல்லெலி, கரப்பைஎலி, வெள்ளெலி என்ற மூன்று வகைகளைக் காணமுடிகின்றது. இவ்வெலிகள் வீடுகளிலும், காடுகளிலும் வாழ்ந்து வருகின்றன.   

காட்டு;;ப்பூனையின் குட்டிக்கு எலிகள் உணவான தன்மையை,

            நள்ளிருள் யாமத்து இல்லெலி பார்க்கும்

            பிள்ளை வெருகிற்கு அல்கிரை யாகி”   (குறுந்-107(3,4))

என்னும் அடிகள் உணர்த்துகின்றன.

குரங்குகள்

      தொல்காப்பியத்தில் மூன்று வகைக் குரங்குகள் கூறப்பெற்றுள்ளன. சங்க இலக்கியத்தில் கருங்கலையைச் சேர்த்து நான்கு வகைக் குரங்குகள் இடம் பெற்றுள்ளன. அவை செம்முகமந்தி, முசு, நரைமுக ஊகம், கருங்கலை என்பவையாகும்.

தொல்காப்பியத்தில்,

            “குரங்கும் முசுவும் ஊகமும் மூன்றும்

            நிரம்ப நாடின் அப்பெயர்க்குரிய”   தொல்.பொரு. மரபியல்.நூ-22

           “குரங்கும் முசுவும் ஊகமும் மந்தி”   மேலது.நூ-23

என்ற நூற்பாக்களில் ‘குரங்கு’ என்ற சொல் ஒருதலைப்பட்ட இனத்தைக் குறித்து வந்தது.

      தமிழ்நாட்டில் எங்கும் எளிதாகக் காணக்கூடியன குரங்குகள். மக்களிடம் பெரிதும் பழகும் ஒருவகைக் குரங்குண்டு. அதே பெயர் பின்னர் பொதுப் பெயராகக் குரங்கு வகைகளைக் குறித்ததெனலாம்ன்பார் பி.எல்.சாமி, சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்..ப-32

“குரங்கு உயர்ந்த மலையிடத்தும், உயர்ந்த மரக்கிளைகளிலும் வாழிடத்தை அமைத்துக் கொள்ளும் என்பதை,

மைப்பட்டன்ன மாமுக முசுக்கலை

 ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற

 கோட்டொடு போகியாங்கு”   (குறுந்.பா-121)

“….. உயர்கோட்டு

 மகவுடை மந்தியொடு……”   (மேலது, பா-29)

என்னும் பாடலடிகள் மெய்ப்பிக்கின்றன.

      குறிஞ்சி நிலத்தில் தலைவி அகன்ற பாறையிடத்தில் சிவந்த தினையைக் காய வைக்கின்றாள். மாலைவேளை நெருங்கும் பொழுது சோர்வாகிப் பொழுதைப் பார்க்கின்றன. இதைக் கண்ணுற்றப் பெண்குரங்கு தம் குட்டிகளோடு அங்கு வந்து அத்தினையைக் கைப்பற்றி உண்ணும் இயல்பை,

            பைங்கண் மந்தி பார்ப்பொடு கவரும்

            வெற்புஅயல் நண்ணியதுவே வார்கோல்…”   (மேலது.பா-325)

என்னும் பாடலடிகளால் அறியலாம்.

ஆண் குரங்கு முதிர்ந்த இனிய பழங்களை மரத்தின் மேலிருந்து உதிர்த்தது. அவற்றை அம்மரத்தின் கீழிருந்த பெண் குரங்குகள் குட்டிகளுக்கு உண்ணுவித்தன என்பதை,

      ஊழுறு தீங்கனி உதிர்ப்பக் கீழிருந்து

      ஏற்பன வேற்பன உண்ணும்

      பார்ப்புடை மந்திய மலை இறந்தோரோ”   (மேலது,பா-298)

என்னும் பாடலடிகள் காட்டுகின்றன. மலையில் கிடைக்கும் பழங்களைக் குரங்குகள் எடுத்துண்ணும் இயல்புடையன என்பதை,

            கடும்பல் ஊகக் கறைவிரல் ஏற்றை

            புடைத்தொடுபு உடையூப் பூநாறு பலவுக்கனி”    (மேலது.பா-373)

           “பொங்குமயிர்க் கலைதொட இழுக்கிய

            பூநாறு பலவுக் கனி”                   (மேலது.பா-90)

           “கலை கைதொட்ட கமழ்சுளைப் பெரும்பழம்”     (மேலது.பா-342)

என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன.

நாய் : செந்நாய் - நீர் நாய்

      சங்க இலக்கியத்தில் ஞமலி, செந்நாய், கோணாய் என்ற மூவகை நாயினங்கள் சுட்டப்பட்டுள்ளன. இவற்றின் வாழ்விடம், உணவு முறை, வேட்டையாடும் தன்மை போன்றவை சிறப்பிடம் பெறுகின்றன. இவற்றில் மனிதனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு வாழ்ந்த நாயினம் ஞமலி ஆகும். இதனை நாய் என்று குறிப்பிடவும் ஒக்கும். அந்நாயின் உதவியுடன் மனிதன் பிற விலங்குகளை வேட்டையாடி உணவைப் பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

      குறுந்தொகையில் செந்நாய் என்னும் நாயின் இனம் சுட்டப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் பாலை நிலத்தில் சுற்றித் திரியும். சிறுபான்மை குறிஞ்சி நிலத்திலும் காணப்படும். இது விலங்குகள் வேட்டையாடி உண்டு சிறு பள்ளத்திலுள்ள நீரை உண்ணும். புலிக்கு இவ்விலங்கு உணவாகும்.

      வேட்டையை மேற்கொண்ட செந்நாய், உண்டு எஞ்சியதாகிய நீரைத் தலைவி பருகினாள் என்பதை,

            வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்

            குளவி மொய்த்த அழுகற் சில்நீர்”  (குறுந்.பா-56)

என்னும் பாடலடி காட்டுகிறது.

      நாயின் இனத்துள் ஒன்றாகிய நீர்நாய் பிரம்பின் தூற்றில் தங்கியிருக்கும். வாளைமீனை உணவாகக் கொண்டு உயிர் வாழும் இயல்புடையது. இதன் உடலில் கோடுகள் இருக்கும் என்பதை,

  அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய்

            வாளை நாளிரை பெறூஉம் ஊரன்”   (மேலது.பா-364)

என்னும் பாடலடியால் அறியலாம்.

      சங்ககால மக்கள் நாய்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் தங்களுக்குரிய பாதுகாப்பைப் பெற்றனர் என்பதையும், நாய் நன்றிக் கடன்பட்டவையாக வளர்ந்தன என்பதையும் அறியமுடிகிறது.

மான்

      சங்கப் பாடல்களில் யானைகள், புலிகளை அடுத்து அதிகம் பாடப் பெற்றவை மான்கள் ஆகும். கருப்பொருள் காட்சிகளாக இடம்பெறும் மான்களைக் குறித்த பல்வேறான செய்திகள், பழந்தமிழரின் காட்டுயிர் மீதான புரிதலைக் கொண்டிருப்பதைக் காணலாம்.

      நவ்வி, இரலை, மரையான், உழை, கடமான், கலை, புல்வாய், கவரி, மரை, ஆமான், பிணை என மானின் வகைகளைச் சங்கப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன.         

   “இரலை இன மான்களின் கொம்புகள் உள்துளை அற்றவை. உள்ளே கெட்டியாக இருக்கும்: கொம்புகள் கீழே விழுந்து புதிய கொம்புகள் திரும்பவும் முளைப்பதில்லை. இதன் கொம்பில் கிளைகள் இல்லை. கலைமான் கொம்புகள் உள்துளையுடையவை. கீழே விழுந்து புதிய கொம்புகள் திரும்பவும் முளைக்கும். கொம்புகளில் கிளை உண்டு”4 என விளக்குவார் பி.எல்.சாமி.

      மான் பெரும்பாலும் முல்லை நிலத்திற்குரியதாகச் சொல்லப்படும். இதன் ஆண் கலை, இரலை எனவும், பெண் பிணை எனவும், குட்டி மறியெனவும் வழங்கப்படும். புள்ளியை உடைய மான் புகரி என அழைக்கப்படுகின்றது.

இயல்பாகவே மான்கள் தன்னுடைய குட்டிகளைப் பாதுகாப்பதிலும், அவற்றிற்குத் தேவையான உணவுகளைச் சேகரித்துக் கொடுப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும். மலைப்பக்கத்தில் தங்குகின்ற வருடை மானின் குட்டியொன்று அதனுடைய தாய்மடியில் சுரக்கும் பாலை அருந்துகின்ற காட்சியைக் கபிலர் காட்சிப்படுத்தியுள்ளார். இதனை,

செவ்வரைச் சேக்கை வருடைமான் மறி

 சுரைபொழி தீம்பால் ஆர மாந்தி”   (குறுந்.பா-187(1-2))

என்னும் பாடலடிகளால் அறியலாம்.

ஆண் மான்கள் மடப்பம் பொருந்தியப் பெண்மான்களைத் தழுவி மயக்கம் அடைந்தன. மிகுந்த காட்டிடத்தில் பொருந்தியப் புதலின் கண்ணே மறைந்து ஒதுங்கி இருக்கும்படி இருந்தன என்பதை,

 “மானேறு மடப்பிணைதழீஇ மருள்கூர்ந்து

 கானம்நண்ணிய புதன்மறைந் தொடுங்கவும்”   (மேலது.பா-319)

என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன.

      இதன் மூலம் தலைவன் மீண்டு வருவதாகக் கூறிச் சென்ற பருவம் வந்ததன்றி, அப்பருவத்தில் ஆண் விலங்குகள் பெண் விலங்குகளோடு ஒன்றுபட்ட தன்மையைக் காணமுடிகிறது.

இரலை

      குறுந்தொகையில் இரலைமான், தன் துணையோடு சேர்ந்து இன்புறுகின்ற தன்மை புலவர்களால் பாடப்பட்டுள்ளது.

  • வலிய பருக்கைக் கற்களுக்கு இடையில் உள்ள தெளிந்த நீரைக் குடித்த ஆண்மான், இன்பத்தை நுகர்வதற்குரிய தன்னுடைய பெண் மானோடு களிப்பினில் சுழன்று விளையாடியது என்று கோவூர் கிழார் பாடியுள்ளார்.
  • பருக்கைக் கற்களை உடைய பள்ளத்தில் தங்கிய நீரை உண்டு ஆண்மான், பெண்மானோடு வழியிடத்துத் துள்ளி விளையாடிய மாலைக் காலத்தை இளங்கண்ணன் பாடியுள்ளார்.  (குறுந்.பா-250)
  • முறுக்கிய கொம்பையுடைய நல்ல ஆண்மான் மடப்பத்தையுடைய பெண்மானோடு தாம் தங்குகின்ற நிழலிடத்தில் தங்கின. மாலைக்காலத்தில் பயற்றம் பருப்பைக் கறித்துத் தின்றதைப் பெருங்குன்றார் பாடியுள்ளார். இதனை,

திரிமருப்பு இரலை அண்ணல் நல்லேறு

 அரிமடப் பிணையோடு அல்கு நிழல் அசைஇ

 வீததை வியல் அரில் துஞ்சிப் பொழுது செலச்

 செழும் பயறு கறிக்கும் புன்கண் மாலை”    (மேலது.பா-338)

என்னும் பாடலடிகளால் அறியலாம்.

யானை

      நிலவாழ் உயிரினங்கில் மிகவும் பெரியது யானையாகும். சங்கப் பாடல்களில் யானை குறித்தான பதிவுகள் பல பாடல்களில் இடம் பெற்றுள்ளன. பண்டைக் காலத்தில் அரசர்கள் யானைப் படைப்பிரிவு வைத்துப் பேணி வந்ததால், யானை இன்றியமையாத விலங்காகக் கருதப்பட்டது. அரசர்கள் தம்மை நாடி வரும் இரவலர்களுக்கு யானைகளைப் பரிசாக அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

      காட்டுயிரிகளில் மிகப்பெரிய உயிரி யானை ஆகும். பேருயிரிகளில் இது முதன்மையாகக் கருதப்படுகிறது. ஏனைய விலங்குகளைக் காட்டிலும் யானைக்கெனத் தனிச்சிறப்புகள் உண்டு. களிறு, கெர்முகம், கயவாய், பாடி, வேழம், காகம்மா, கயமா, பிணிமுகம், இறையடி, உம்பல், வாரணம், நாகம், குஞ்சரம், கரி போன்ற 23 பெயர்களைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன5 என்று குறிப்பிடுவர்.

யானையின் உடல் கருமையும், பெருமையும் கொண்டது என்பதால் அதனை மழை மேகங்களுடனும், மலை, குன்று, பாறைகளுடனும், படகுகளுடனும் ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளதை,

      செருநவில் வேழம் கொண்மூ வாக”     புறம்.பா-373

     “பிடிமடிந்தன்ன குறும்பொறை மருங்கின்”  அகம்.பா-269

     “வரைபுரையும் மழகளிற்றின் மிசை”     புறம்.பா-38

என்னும் அடிகளால் அறியலாம்.

யானை தோற்றத்தில் மலையை ஒத்துக் காட்சியளிக்கும். யானைகள் கூட்டமாக வாழும் இயல்புடையன. யானைக் கூட்டத்திற்குக் களிறு ஒன்று தலைமை வகித்துத் தன் கூட்டத்தைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் என்பதை,

பொத்துஇல் காழ அத்த யாஅத்துப்

 பொரியரை முழுமுத லுருவக் குத்தி

 மறங்கெழு தடக்கையின் வாங்கி யுயங்கு”   குறுந்.பா-255:

என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன.

      மேலும், புழுதியைத்தானே தன்மீது வாரிவீசிக் கொள்ளும் இயல்புடையது என்பதை,

            மழைகழூஉ மறந்த மாயிருந் துறுகல்

            துகள் சூழ் யானையிற் பொலியத் தோன்றும்”    குறுந்.பா-279

என்னும் அடிகளால் அறியலாம்.

            சோலையாக வளர்ந்தள்ள வாழையின் குருத்துக்களை மிகுதியாகத் தின்றதால் பித்தேறியது போல் மயங்க, மடப்பம் பொருந்திய அதன் பெண்யானை பித்தேறிய அக்களிற்றின் முதுனைத் தடவிக் கொடுத்தது என்றும் புலவர்கள் பாடியுள்ளனர். இதனை,

            சோலை வாழைக் சுரிநுகும்பு இனைய

           அணங்குடை இருந்தலை நீவலின் மதன் அழிந்து

           மயங்கு துயர் உற்றமையல் வேழம்

.          ,,,,,,,,,, ,,,,,,,,,,,      ,,,,,,,,,,, ,,,,,,,,,,”     குறு.பா.308

என்னும் பாடலடிகள் விளக்குகின்றன. செங்காந்தள் மலர்கள் போர்க்களத்தில் புள்ளிகளைக் கொண்ட யானையின் முகத்தைப் போல மலர்ந்திருந்தன என்பதை,

            பொருத யானைப் புகர் முகம் கடுப்ப

            மன்றத் துறுகல் மீமிசைப் பலஉடன்           மேலது.பா-284

என்னும் அடிகள் காட்டுகின்றன.  இவ்விடத்தில்

            “நிரைத்த யானை முகத்துவரி கடுப்பப்

            போதுபொதி யுடைந்த வெருஉ செங் காந்தள்”   நற்.பா-176

என்னும் நற்றிணைப் பாடலடிகளும் ஒப்பு நோக்கத்தக்கன.

      யானையின் கோரைப் பற்கள் ‘கோடு’ என்று அழைக்கப்படுகின்றன. பாலை நிலத்து யானை உயிரிழந்து காணப்பட்டால் அதன் கோடு மலையைக் குத்துமளவிற்கு உறுதியுடன் காணப்படுகிறது என்பதை,

            சுரம்செல் யானைக் கல்லுறு கோட்டின்

            தெற்றென இறீஇயரோ ஐய…”          குறுந்.பா-169

என்னும் பாடலடிகள் தெளிவுறுத்துகின்றன.

      யானையின் கால் நகங்கள் பெரியவை. ஆனால் உறுதியற்றவை. காட்டு நெறியிலுள்ள நடுகல்லை ஆள் என நினைத்து உதைத்ததால் சிதைவுற்ற நகம், உரல் போல ஒடிந்து கிடந்ததை,

            உரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய

            யாஅவரி நிழல் துஞ்சும்

            மாஇருஞ் சோலை மலை இறந்தோரே”   மேலது.பா-232

என்னும் பாடலடிகளால் அறியலாம்.

விலங்குயிர்களின் வாழ்வியலும் சூழலும்

      விலங்குயிர்களில் பொதுவாகக் காடுகளில் வாழ்ந்தாலும், அவை மக்களின் வாழ்வியலோடும் ஒன்றி வருகின்றதைக் குறுந்தொகைப் பாடல்கள் புலப்படுத்தியுள்ளன. விலங்குகளின் வாழ்வியலை,

  • ஒன்றையொன்று சார் வாழ்வியல்,    பாலூட்டிகள்
  • நிலச் சூழலியலைப் பொருத்து இயங்குயிர் வேறுபடல்
  • கூட்டமாக வாழுதல்
  • குட்டிகளிடம் அன்பு காட்டும் இயங்குயிர்கள்
  • வாழ்விடச் சூழலியல்

ஒன்றையொன்று சார் வாழ்வியல்

      உணவுச் சங்கிலியில் ஆற்றல் ஓட்டமானது உயிரியப் பன்முகத்தினுள்ளே கடத்தப்படுகிறது. தாவரம் பறவை  விலங்கு. சூழலியலின் வளத்தைப் பொறுத்து அங்கு வாழும் உயிரினங்களின் எண்ணிக்கை அமைகிறது. சூழலியலில் உயிர்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. நாரை நீர்நிலைகளில் வாழும் கெண்டை மீனைச் சார்ந்து வாழ்கின்றதை,

      குருகு கொளக் குளித்த கெண்டை”   (குறுந்.பா-127)

என்ற பாடலடி காட்டுகிறது.

      “இரைதேர் வெண்குருகு அல்லதி யாவதும்

      துன்னல் போகின்றால் பொழிலே”        மேலது.பா-113    

என்னும் அடிகளால் அறியலாம்.

துளங்கு நடை மரையா வலம்படத் தொலைச்சி

      ஒண் செங்குருதி உவற்றியுண்டு அருந்துபு

 புலவுப்புலி துறந்த கவவுக் கழிக் கடுமுடை

      கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்”   அகம்.பா-3

என்ற பாடலடிகள் புலி மறையாவைக் கொன்று உணவை உண்ணும் காட்சி இடம் பெற்றுள்ளதை அறியமுடிகிறது.கூட்டமாக  வாழுதல்

      யானை, மான், குரங்கு, புலி, ஆடு, தவளை, எறும்பு, வெட்டுக்கிளி போன்றவை கூட்டமாகச் சேர்ந்து வாழும் இயல்புடையன. சமுதாய வாழ்க்கையுடைய பாலூட்டிகள் இருவகையாகப் பிரிக்கலாம். இவை தனி வாழ்வு வாழ்வனவும், சமுதாய வாழ்வு வாழ்வனவுமாகும். இருப்பினும் பாலூட்டித் தனிவாழ்வு வாழ்வது சாத்தியமாகாது. ஏனென்றால் பாலினங்களுக்கு இடையே கலவி புரியும் பொழுதும், தாய்க்கும், சேய்க்கும் வளர்ச்சிப் பருவத்தின் பொழுதும், குறைந்த அளவிலாவது சமுதாய அடிப்படையில் நடத்தை இருக்க வேண்டும்” என்று ஆல்பிரட் மோகன்தாஸ் குறிப்பிடுகின்றார்

விலங்;குகின் .சமுதாய வாழ்க்கை.ப-164

குரங்கு இனமானது முசு, கலை, கடுவன், மந்தி, ஊகம் எனப் பல வகைப்பட்டது. குரங்கின் தலைவன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியதை,

குரங்கின் தலைவன் குறுமயிர்க் கடுவன்”   ஐங்.பா-275

என்னும் பாடலடியால் அறியலாம்.

 

கருமுகம் கொண்ட குரங்கைப் பற்றி,

            “கடும்பல் ஊகம் கறைவிரல் ஏற்றை”           குறுந்.பா-373

           “நரைமுக ஊகம் பார்ப்பொடு பனிப்ப”         மேலது.பா-249

என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன.

      யானைகள் கூட்டமாக வாழும் தன்மையுடையன. வயதில் மூத்த யானை, கூட்டத்திற்குத் தலைமையாக இருந்தமையை,

            மண்எடுத்து உண்ணும் அண்ணல் யானைமேலது.பா-260

என்ற பாடலடி காட்டுகிறது.

            கிளை பாராட்டும் கடுநடை வயக்களிறுஅகம்.பா-218

           “அண்ணல் யானை வெண் கோடு”      மேலது.பா-61

என்னும் பாடலடிகளும் யானைகளின் கூட்டத்திற்கு ஆண் யானைகள் பாதுகாப்பாக இருந்தன என்பதைக் காட்டுகின்றன.

நீர் விலங்குகள்

      நிலத்தில் உயிரினங்கள் வாழ்வது போன்று நீரிலும் உயிரினங்கள் வாழ்வது அனைவரும் அறிந்ததே. உலகில் நிலத்தின் பரப்பைக் காட்டிலும் நீரின் பரப்பே மிகுதி. அதன் அடிப்படையில் நீர் என்பது நிலத்தைக் காட்டிலும் பரந்துபட்ட வாழிடமாக அமைகின்றது. நீர் வாழிடம் என்பது பரந்துபட்ட கடற்பகுதி எனும் நிலையில் மட்டுமல்லாமல் நிலப்பகுதியில் அமையப்பெற்ற ஆறு, குளம், ஏரி, அணை போன்றவற்றையும் உள்ளடக்கியதாகவுள்ளது. உவர் நீர், நன்னீர் என்ற இருநிலைகளில் நீர்நிலைகளைப் பகுக்கலாம். கடல் உவர்நீரைக் கொண்டது. நிலப்பரப்பில் காணப்படும் ஆறு, குளம், குட்டை போன்றவை நன்நீரைக் கொண்டமைவன. இதன் அடிப்படையில் நீர் விலங்குகளை நன்னீர் விலங்குகள், உவர்நீர் விலங்குகள் எனப் பகுக்கலாம்.

மீன்கள்

      குறுந்தொகைப் பாடல்களில் நன்னீரில் வாழும் மீன்கள் உவர்நீரில் வாழும் மீன்கள் என வாழிடப்பகுப்பின் அடிப்படையிலான இருவகை மீன்களும் சுட்டப்பட்டுள்ளன. அயிரை, ஆரல், இறால், கெளிறு, கெண்டை, கொழுமீன், சுறா, பனைமீன், வரால், வாளை ஆகிய மீனினங்கள் குறுந்தொகை பாடல்களில் காணப்படுகின்றன.

            இனம் னிருங்கழி”              - குறுந்தொகை, பா.324

எனும் பாடலடியால் அறியலாம்.

      மீன் இனத்தின் வகைமை சுட்டாமல் பொதுவான பெயராகச் சுட்டும் முறைமையில் ‘சிறுமீன்’ என்ற பதம் அமைகின்றது.

            உறுகழிச் சிறுமீன் முனையிற்           - குறுந்தொகை, பா.293

என்ற பாடலடியால் காண முடிகிறது.

      நெய்தலாகிய உவர் நீர்ப் பகுதி மற்றும் மருதமாகிய நன்னீர்ப் பகுதி ஆகிய இரு இடங்களிலும் ஆரல் மீன் இடம்பெற்றுள்ளதையும்,

            ஆர லருந்த வயிற்ற            - குறுந்தொகை, பா.114

      இறாலானது வளைந்த முதுகுப்புறத்தினையும் வளைந்த கால்களையும் கொண்ட உருவமைப்பைக் கொண்டுள்ளதை,

            முடக்கா லிறவின் முடங்குபுறப் பெருங்கிளை”    - குறுந்தொகை, பா.109

எனும் பாடலடி காட்டுகின்றது.

ஊர்வன

      ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினங்கள் இருபது கோடி ஆண்டுகட்கு முன்பு தோன்றியதாக உயிர்நூல் வல்லுநர்கள் கூறுகின்றனர். கால்கள் இன்றி உடலின் அடிப்பகுதியில் உள்ள செதில்களைக் கொண்டு நகர்வனவும் கால்கள் இருந்தும் மற்ற விலங்கினங்களைப் போன்று எழுந்து நடவாமல் தன் உடலின் அடிப்பகுதி நிலத்தில் படும்படி நடப்பனவும் ஊர்வன எனும் உயிர்ப்பகுப்பினுள் அங்குகின்றன.

ஆமை

      ஆமைகளைப் பொதுவாக கடல் ஆமைகள் என்றும் நில ஆமைகள் என்றும் பகுக்கலாம். இவ்விரு பகுப்புகளில் உள்ளினப் பகுப்பாக பல ஆமையினங்கள் காணப்படுகின்றன. நில ஆமைகளில் இருந்தே கடல் ஆமைகள் தோன்றியதாகக் கூறுவர். கடலாமைகள் மெசோசோயிக் ( ஆநளழணழiஉ – நீர்நில வாழ்விகளும், பாலூட்டிகளும் பெருகிய காலத்திற்கு இடைப்பட்ட ஊர்வன வகைகள் பெருகிய காலம்) காலத்தின் இறுதிப் பகுதியில் நில ஆமைகளில் இருந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது எனும் கூற்றால் இதனை அறியலாம்.

      ஆமையானது முட்டைகளை மணலுள் இட்டுச் சென்றபின் தானாகப் பொறியும் குஞ்சுகள் தன்னைத்தான் பாதுகாத்து பல ஊனுண்னும் பறவைகளினின்றும் தப்பி வருந்திப் பின் கடலுள் சேரும். அதுபோல காதலர் காதலை ஏற்படுத்திச் சென்று விட்டார். இந்நிலையில் என்னை நானே காப்பாற்றிக் கொள்ளவேண்டியவளாக உள்ளேன் எனத் தலைவி கூறும் விதமாக அமைந்ததை,

            யாவது மறிகிலர் கழறு வோரே

           தாயின் முட்டை போலவுட் கிடந்து

           சாயி னல்லது பிறிதெவ னுடைத்தோ

           யாமைப் பார்பி னன்ன

           காமங் காதலர் கையற விடினே”               - குறுந். பா.152

எனும் இப்பாடலில் தாயில்லாத முட்டை மணலுள் கிடந்து அதனுள் உள்ள குஞ்சுகள் தானாக வருத்தி வெளிவருவது சுட்டுப்படுகின்றது..

தொகுப்புரை 

  • தொல்காப்பியத்தில் விலங்கைக் குறிக்க ‘மா’ என்ற பொதுச்சொல் இடம் பெற்றிருந்தாலும்,‘விலங்கு’ என்ற சிறப்புச் சொல்லும் இடம்பெற்றுள்ளன..
  • அறிவியலார் புற அமைப்பு அடிப்படையிலும், அக அமைப்பு அடிப்படையிலும் உயிரினங்களை வகைப்படுத்தியுள்ளனர். தொல்காப்பியர் மரபியலில் உயிரினங்கள் இயங்குயிர் அமைப்பில் ஈரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரை வகைப்படுத்தியுள்ளமை புலனாகின்றது.
  • குறுந்தொகைப் பாடல்களில் ஆடு, வருடை, வரையாடு. ஆமான், எருமை முதலான விலங்கினங்களின் வாழ்விடச் சூழலும், அகமாந்தர்கள் இணைந்த பாங்கும் சுட்டப்பட்டுள்ளன..
  • ஆண் குரங்கு முதிர்ந்த இனிய பழங்களை மரத்தின் மேலிருந்து உதிர்த்தன. அம்மரத்தின் கீழிருந்த பெண் குரங்குகள் குட்டிகளுக்கு உண்ணுவித்தன என்பதையும், குரங்குகள் மலைப் பகுதிகளைத் தம் வாழ்விடமாகக் கொண்டிருந்தன என்பதும், குறிஞ்சித் திணைப் பாடல்களில் குரங்குகளின் வாழ்வியல் கருப்பொருளாகவும், வருணனையாகவும் கொண்டு அமைந்துள்ளன என்பதும் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.
  • நவ்வி, இரலை, மரையான், உழை, கடமான், கலை, புல்வாய், கவரி, மரை, ஆமான், பிணை என மானின் வகைகளைச் சங்கப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன, ஆண் மான்கள் மடப்பம் பொருந்திய பெண்மான்களைத் தழுவி மயக்கம் அடைந்தன. மிகுந்த காட்டிடத்தில் பொருந்திய புதலின் கண்ணே மறைந்து ஒதுங்கி இருக்கும்படி இருந்தன என்றும் குறுந்தொகைப்;பாடல்கள் விளக்கியுள்ளன.
  • விலங்குயிர்கள் பொதுவாகக் காடுகளில் வாழ்ந்தாலும், அவை மக்களின் வாழ்வியலோடும ஒன்றி வருகின்றதையும் குறுந்தொகைப் பாடல்கள் புலப்படுத்தியுள்ளன.

ஆய்விற்குத் துணை நின்ற நூல்கள்

1.     உ. வே. சாமிநாதய்யர். குறுந்தொகை மூலமும் உரையும்.

2.     முகமது அலி, இயற்கைச் செய்திகள் சிந்தனைகள்.

3.     கலைக்களஞ்சியம்.

4.     சூழ்நிலையியல்.

5.     பி.எல். சாமி. . சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்..

6.     அர.சுதமதி,   சங்க இலக்கியத்தில் காட்டுயிரினங்களும், சூழல் பாதுகாப்பும்.